சனி, 31 டிசம்பர், 2022

#1166 - இயேசு தன்னை எப்பொழுதாகிலும் கடவுள் என்று சொன்னதுண்டா? அவரே தன்னைக் குறித்து அவ்வாறு சொல்லாத போது நீங்கள் அவரை கடவுளாக வணங்குவது தவறு என்றும் அவர் ஒரு தீர்க்கதரிசி மாத்திரமே என்றும் இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். ஐயா, நீங்கள் இதற்கு விளக்கம் அளிக்கமுடியுமா?

#1166 - *இயேசு தன்னை எப்பொழுதாகிலும் கடவுள் என்று சொன்னதுண்டா? அவரே தன்னைக் குறித்து அவ்வாறு சொல்லாத போது நீங்கள் அவரை கடவுளாக வணங்குவது தவறு என்றும் அவர் ஒரு தீர்க்கதரிசி மாத்திரமே என்றும் இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். ஐயா, நீங்கள் இதற்கு விளக்கம் அளிக்கமுடியுமா?*
 
*பதில்* : இஸ்லாமியர்கள் தங்கள் கருத்தை சொல்வதைக் காட்டிலும், கிறிஸ்துவின் ஊழியர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் பலருக்கே இயேசு கிறிஸ்துவைக் குறித்த முறையான புரிதல் இல்லை.

தேவத்துவத்தில் மூவர் இருக்கின்றனர்.

எண்ணிக்கையில் மூவர் எண்ணத்தில் ஒன்றாய் உள்ளனர்.

இந்த தலைப்பைக் குறித்து முழுமையாய் அறிய நமது பதில் எண் #431ல் காணலாம்.

முதன்மையாகவும் பிரதானமாகவும் தொழுகையானது பிதாவிற்குறியது. மத். 4:10

நாம் பிதாவையே தொழுதுக்கொள்கிறோம். கிறிஸ்துவின் மூலமாக தொழுகிறோம்.

கிறிஸ்துவிற்கு பிதாவானவர் தலையாய் இருக்கிறார் என்று 1கொரி. 11:3 சொல்கிறது.

என்னிலும் என் பிதா பெரியவர் என்று கிறிஸ்து சொல்லியிருக்கிறார். யோ. 14:28

பிதா சொல்லியதையே தான் சொல்வதாகவும், தான் சொல்லியதையே பரிசுத்த ஆவியானவரும் சொல்வார் என்றும் கிறிஸ்து சொல்கிறார். யோ. 16:13-15

அப்படியானால் கிறிஸ்து தொழுகைக்குறியவரல்ல என்றர்த்தம் அல்ல.

அவர் தேவத்துவத்தில் ஒருவர்.

தொழுகைக்கு பாத்திரரானவரே.

*தன்னை தொழுதுக்கொண்டவர்களை கிறிஸ்து தடுக்கவில்லை என்கிற சில வசனங்களை கீழே குறிப்பிடுகிறேன்:*

1-குஷ்டரோகி அவரை  பணிந்துக்கொண்டபோது – மத். 8:2

2-ஜெபஆலயத் தலைவன் அவரை பணிந்துக்கொண்டபோது – மத். 9:18

3-சீஷர்கள் அவரை பணிந்துக்கொண்டபோது- மத். 14:33

4-கானானிய பெண்மனி அவரை பணிந்துக்கொண்டபோது – மத். 15:25

5-கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னரும் அவரது சீஷர்கள்  அவரை பணிந்துக்கொண்டபோது – மத். 28:9: 18-19

6-தோமா இயேசுவை தேவனே என்றழைக்கிறார். அதை கிறிஸ்துவும் ஆமோதிக்கிறார். யோ. 20:28-29

தேவதூதர்கள் இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளவேண்டும் என்று கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. எபி. 1:6

*குறிப்பு*: ப்ரொஸ்க்யூனியோ என்ற கிரேக்க வார்த்தைக்கு தொழுதுக்கொள்ளுதல் என்று பொருள். அந்த வார்த்தையை தான் பணிந்து கொண்டார்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் தெளிவாக worship என்றுள்ளது.

பிதாவாகிய தேவன், இயேசு கிறிஸ்துவை தேவன் என்றழைப்பதை எபி. 1:8-9ல் காணலாம்.

அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடும்படி கட்டளை கொடுக்கப்பட்டதே!! இம்மானுவேல் என்றால் – தேவன் நம்முடன் இருக்கிறார் என்றல்லவா அர்த்தம்! மத். 1:23

அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். யோவான். 5:22:23

 *குமாரனை கனம் பண்ணாதவன் பிதாவையும் கனம் செய்வதில்லை என்பதை குறிப்பாய் கவனிக்கவும்*

பின்மாறினவர்கள் தங்களது நிலைமையை உணர்ந்து மனந்திரும்புவது எளிது. ஆனால் வஞ்சிக்கப்பட்டவர்களது மனந்திரும்புதலோ மிகவும் கடினம் என்று வேதம் தெளிவாய் சொல்கிறது.

தெள்ளத்தெளிவாக வசனங்கள் இருந்தும்; கிறிஸ்துவை தேவன் அல்லவென்றும் அவர் வெறும் தேவ குமாரன் தான் என்றும் வாதாடுபவர்கள் தங்களது எண்ணங்களை மேலோக்கி அதையே பற்றிக்கொண்டு உண்மையை அறிந்து கொள்ள மறுத்து தேவ வசனத்தையே ஏற்க மனமில்லாதவர்கள்.

யோவான் சுவிசேஷத்தின் துவக்கமே “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” என்று 1:1-3ல் காண்கிறோம்.

நன்கு கவனிக்கவும் “அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, *அந்த வார்த்தை தேவனாயிருந்தது*” என்று வேதம் சொல்கிறது.  தேவனிடத்திலிருந்தது என்றால் அங்கு பன்மையை பார்க்கிறோ. எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டிருப்பதை கவனிக்கவும்.

மேலும், யோவானில் தொடர்ந்து நாம் 10ம் வசனத்தை வாசித்தால், "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை என்றும் 14ம் வசனத்தில் “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்று தெளிவாய் உள்ளது. அந்த வார்த்தை எனப்படுபவர் இயேசு கிறிஸ்து.

ரோமர் 9:5ம் வசனத்தில் “பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, *இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்*” என்றுள்ளது.

ரோமர் 10:12ல்…*தம்மைத் தொழுதுக்கொள்கிற யாவருக்கும்* கர்த்தரானவர் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார் என்றுள்ளது.

1தீமோ. 3:16ல் “தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்” என்றுள்ளது.

1யோ. 5:20 … *இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்* என்று அப்போஸ்தலர்களிலேயே வயதில் முதிர்ந்த யோவான் எழுதுகிறார்.

அப். 20:28…*தேவன் தமது சுயரத்தினாலே* சம்பாதித்த சபை என்றுள்ளது.

மேலும், இயேசு கிறிஸ்து இயற்கைக்கு அப்பாற்பட்டு சகல அற்புதங்களையும் செய்து தனது தெய்வீகத்தை வெளிப்படுத்தினார்.

அழுகிப்போன சரீரத்தை உயிருடன் எழுப்பினார்.

1- காற்றும் கடலும் இவரது வார்த்தைக்கு கீழ்படிந்தன.

2- 2அப்பங்களும் 5 மீன்களும் மாத்திரம் இருந்த போதும் புருஷர்கள், ஸ்திரீகள், 3- பிள்ளைகள் என்ற கணக்கில் குறைந்தபட்சம் 15,000 பேருக்கு ஆகாரத்தை கொடுத்தார்.

3- சரீரம் கெட்டு சீழ்பிடித்து இருந்தபோதும் தீராவியாதியாயிருந்த அநேகங் குஷ்டரோகிகளை குணமாக்கினார்.

4-பிறவி குருடருக்கு பார்வையளித்தார்.

5-பிறவி சப்பானிகளுக்கு சுகமளித்தார்.

இப்படி இன்னும் பல பல அற்புதங்களை அவர் செய்தார்.
 
நாட்டிற்கு உண்மையான இராஜா ஜனங்களிடத்தில் வந்து நான் தான் இராஜா என்று தன்னை பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை!

இவ்வளவு தெளிவான வசனங்களை காண்பித்த பின்னரும்;
இயேசு தேவ குமாரன் மாத்திரமே, அவரை தேவன் என்று சொல்லக்கூடாது தொழுது கொள்ள அவர் பாத்திரமானவர் அல்ல என்பவர்களது மனக்கண்களை தேவன் திறக்கும்படி நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக