சனி, 7 ஜனவரி, 2023

#1167 - தேவனிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் அன்புகூறுவது எப்படி?

#1167 - *இயேசு கிறிஸ்து வனாந்திரத்தில் சோதிக்கப்படும் போது தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக என்று மத்தேயுவில் சொல்கிறார். அந்த வசனத்தை அநேகர் தவறாக புரிந்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையாகவே தேவனிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் அன்புகூறுவது எப்படி என்பதை வசனத்தின்படியாக விளக்கவும்.*

*பதில் : அநேகருக்கு முகச்சுளிவை உண்டு பண்ணும் பதிவு… கவனம் !!*
சாரம் குறையாமல் அப்படியே எழுத வேண்டியது எனது கடமை.

“முழு இருதயத்தோடும் & முழு ஆத்துமாவோடும்” என்ற இந்த இரு வாக்கியங்களும் ஒரு சேர்ந்து முழு வேதாகமத்திலும் 20 வசனங்களில் காணமுடிகிறது. முதலாவது வருவது உபாகமம் 4:29ல்!!

கானான் தேசத்தை *சுதந்தரிக்கும் முன்பு* இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே *எச்சரித்து* சொன்னவைகள் இது. உபா. 4ம் அதிகாரம்.

இந்த வாக்கியத்தின் சூழல் நம் அனைவருக்கும் பெரிய பாடம்.

தேவனை நாம் நேரில் கண்டதே இல்லை.
கடவுள் உருவமற்றவர் அவர் ஆவியாயிருக்கிறார் என்று நம்பினாலும், மனிதர்களோ தங்களுக்கு இஷ்டமான வடிவத்தை உருவாக்கிக் கொள்வதைக் கண்டிக்கிற வாக்கியம் இது.

உபாகமம் 4:16-29 வசனங்களில் அச்சூழலை மிகுந்த பயத்துடன் நாம் காணமுடிகிறது. அவ்வசனங்களை வேதாகமத்திலிருந்து *அனைவரும் கவனமாய் துல்லியமாக கட்டாயம் வாசிக்க வேண்டும்*.

*சாராம்சம் என்னவென்றால்* :
எவ்விதமான ஆண் அல்லது பெண் போன்ற உருவமோ,
அல்லது வானத்திலுள்ள நட்சத்திரங்கள் போன்றோ (எ.கா. சூரியன்)
அல்லது யாதொரு மிருகம் போன்றோ (எ.கா. யானை, காளை)
அல்லது பறவை போன்றோ (எ.கா. கழுகு, மயில்)
அல்லது ஊரும் பிராணியை போன்றோ (எ.கா பாம்பு, எலி)
அல்லது தண்ணீரிலுள்ளவைகள் போன்றோ (எ.கா மீன்)
போன்ற எந்த விதமான உருவத்திற்கும் ஒப்பானதை வணங்கக்கூடாது.

சுருக்கமாக சொன்னால்
பூமிக்கு மேலேயுள்ளதும் பூமிக்கு கீழேயுள்ளதுமான எவ்வித விலங்கு, மனிதன், பறவை, பூச்சி, பெண், அல்லது பூ என்று எதற்கு முன்பாவது “என்னை காப்பாற்று” என்று வணங்கி கையெடுத்து கும்பிட்டால் – *தங்களை கெடுத்துக்கொள்கிறார்கள்* என்று வேதாகமம் எச்சரிக்கிறது !!!!!!!!

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு ஏதாகிலும் ஒரு உருவத்திற்கு முன்பாக அல்லது Photoவிற்கு முன்பாக அல்லது சிலைக்கு முன்பாக அல்லது புத்தகத்தை வைத்து கும்பிட்டாலோ, வணங்கினாலோ நம் வாழ்க்கையை நாமே கெடுத்துக்கொண்டு அழிந்து போகிறோம் என்று வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது !!! உபா. 4:25-26

ஓங்கி வளர வேண்டும் செழிப்பாய் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் எதையாவது செய்து முன்னேறிவிடலாம் என்று செயல்படும் இச்செயல்களால் மேலும் கெடுத்துக்கொள்வதாக எச்சரிக்கிறார்.

தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். உபா. 4:24

அச்செயல் தேவனாகிய கர்த்தருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்குகிறது. உபா. 4:25

அதனிமித்தம் வாழ்க்கை அழிகிறது என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைக்கிறேன் என்ற *கடுமையான எச்சரிக்கை* சொல்லப்பட்டுள்ளது. உபா. 4:26

வாழ்க்கை நிர்மூலமாக்கப்படும் என்று எச்சரிப்பு உள்ளது. உபா. 4:26

வாழ்க்கை சிதற அடிக்கப்படும் என்று எச்சரிப்பு உள்ளது. உபா. 4:27

கடவுள் என்ற நம்பிக்கையில் பக்தியோடும் பரவசத்தோடும் விக்கிரகங்களை நோக்கி வணங்கினால் வாழ்க்கையை இழந்து, பரிதவித்து, நிர்மூலமாகி, சமாதானம் இழந்திருக்கும் சூழலில் அப்பொழுது உணர்வு ஏற்பட்டு அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய் என்று வேதம் அறிவுரை வழங்குகிறது. உபா. 4:29

முழு இருதயம் என்பது : வேறெந்த சிந்தையுமின்றி, எந்த ஊருக்கும் போய் கடவுளை தேடாமல், எந்த விக்கிரக்தையும் உதறி போட்டு, உருவமற்ற கடவுளை சொந்த மனதில் முழுமையாய் நினைத்து, அவருக்கு பயந்து வணங்கி அவரது வார்த்தைக்கு கீழ்படிந்தால் – ஆத்துமா (வாழ்க்கை) செழிக்கும்.

ஆத்துமா என்பது வாழ்க்கையை குறிக்கிறது.

இந்த வாக்கியத்திற்கு இன்னும் அதிகமான விளக்கங்களை தரமுடியும். ஆனால் இவை இச்சூழலில் போதுமானது என்று நம்புகிறேன்.

அனைவரும் குறிப்பிட்ட வசனங்களை வேதாகமத்திலிருந்து ஒன்றுவிடாமல் வாசித்து பார்க்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229 (இந்தியா)
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/GTYCEzS5IEZBnAllvlLT4R

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக