ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

#1247 - ஆதியாகமம் 37:26-28 வசனத்தின்படி யோசேப்பின் சகோதரர்கள் யோசப்பை குழியிலிருந்து தூக்கி எடுத்து விற்றதாக கூறப்படவில்லை. ஆனால், குழியில் போட்ட சகோதரர்கள் அவரை எடுத்து இஸ்மவேலரிடத்தில் விற்றார்கள் என்று கூறப்படுவதற்கு காரணம் என்ன?

#1247 - *ஆதியாகமம் 37:26-28 வசனத்தின்படி யோசேப்பின் சகோதரர்கள் யோசப்பை குழியிலிருந்து தூக்கி எடுத்து விற்றதாக கூறப்படவில்லை. ஆனால், குழியில் போட்ட சகோதரர்கள் அவரை எடுத்து இஸ்மவேலரிடத்தில் விற்றார்கள் என்று கூறப்படுவதற்கு காரணம் என்ன?* மேலும் வசனம் 28 இல் மீதியானியர் இஸ்மவேலர் கையில் விற்று போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வசனம் 36 இல் பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமான போத்திபார் என்பவனிடத்தில் விட்டார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து தெளிவாக விளக்கவும்.
 
*பதில்* : ஆதியாகமம் 37:28-ல் “அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்து போகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள்...” முந்தைய வசனத்தில் (27) யூதா மற்றும் சகோதரர்கள் என்று குறிக்கப்படுவதால் “அவர்கள்” என்பது யோசேப்பின் சகோதரர்களைக் குறிக்கிறது என்று தோன்றுவது இயல்பானது.
 
ஆனால் 28-ஆம் வசனத்தின் அமைப்பை மட்டும் வைத்து, “சகோதரர்களே யோசேப்பை குழியிலிருந்து எடுத்தார்கள்” என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
 
ஆதியாகமம் 37:28 — மீதியானிய வர்த்தகர்கள் வந்து யோசேப்பை குழியிலிருந்து எடுத்ததாக வாசிக்க முடிகிறது.
 
ஆனால் ஆதியாகமம் 37:29-ல் ரூபன் திரும்பி வந்து: “இதோ, யோசேப்பு குழியில் இல்லை” என்று அறிந்து தன் வஸ்திரங்களைக் கிழிக்கிறான்.  யோசேப்பை குழியில் போட்ட பிறகு, சகோதரர்கள் அங்கே தொடர்ந்து இருந்தார்கள் என்று அவசியமில்லை. ரூபன் யோசேப்பை மீட்க நினைத்தவன். அவன் திரும்பி வந்தபோது யோசேப்பு இல்லை. எனவே, வசனம் 28-ஐ நேரடியாக வாசித்தால், வர்த்தகர்கள்/மீதியானியர்கள் யோசேப்பை குழியிலிருந்து எடுத்துச் சென்றார்கள் என்று புரிந்து கொள்வதற்கு வலுவான காரணம் இருக்கிறது.
 
யூதாவின் கூற்றை கவனிக்கவும். “அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்...” அதாவது, யோசேப்பை விற்பது என்ற திட்டத்தை சகோதரர்கள் ஏற்றுக்கொண்டார்கள். 
 
ஆதியாகமம் 37:36: “மீதியானியரோ அவனை எகிப்திலே பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமான போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.” என்கிறது.
 
அதாவது, 
யோசேப்பு 

குழியில் போடப்பட்டான்

மீதியானிய/இஸ்மவேல வர்த்தகர்கள் வந்தார்கள்

யோசேப்பு அவர்களுடன் எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்டான்

போத்திபாரிடம் விற்றார்கள்
 
*கூடுதல் தகவல்:*

 இஸ்மவேலர் – இஸ்மவேல் — ஆபிரகாமுக்கும் ஆகாருக்கும் பிறந்தவன். (ஆதி. 16:15)
 மீதியானியர் -  மீதியான் — ஆபிரகாமுக்கும் கேத்தூராளுக்கும் பிறந்தவன். (ஆதி. 25:1-2)
 
ஆதியாகமம் 37-ல் நடக்கும் நிகழ்வுகளின் சரியான வரிசை:
 
1. *யோசேப்பு குழியில் தள்ளப்படுதல்:*
சகோதரர்கள் யோசேப்பின் அங்கியைக் கழற்றி, அவனைத் தண்ணீரில்லாத ஒரு வெறுமையான குழியில் போட்டார்கள் (ஆதியாகமம் 37:23-24).
 
2. *யூதாவின் யோசனை:*
எகிப்தை நோக்கிச் செல்லும் இஸ்மவேலரின் வர்த்தகக் குழுவைக் கண்டு, "நாம் யோசேப்பைக் கொல்வதை விட, இந்த இஸ்மவேலருக்கு விற்றுவிடுவோம்" என்று யூதா சகோதரர்களிடம் கூறினான் (ஆதியாகமம் 37:26-27).
 
3. *மீதியானிய வர்த்தகர்கள் யோசேப்பை எடுத்தல்:*
மீதியானிய வர்த்தகர்கள் அந்த வழியாகக் கடந்து சென்றபோது, யோசேப்பைக் குழியிலிருந்து தூக்கியெடுத்தார்கள் (ஆதியாகமம் 37:28).
 
4. *வெள்ளிக்காசுக்கு விற்கப்படுதல்:*
யோசேப்பு இருபது வெள்ளிக்காசுக்கு இஸ்மவேலர்களிடம் விற்கப்பட்டான்; அவர்கள் அவனை எகிப்திற்குக் கொண்டுசென்றார்கள் (ஆதியாகமம் 37:28).
 
5. *ரூபனின் அதிர்ச்சி:*
யோசேப்பைக் காப்பாற்ற நினைத்த ரூபன் குழிக்குத் திரும்பி வந்தபோது, யோசேப்பு அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டான் (ஆதியாகமம் 37:29-30).
 
6. *தகப்பனை ஏமாற்றுதல்:*

சகோதரர்கள் வெள்ளாட்டுக்கடாயைக் கொன்று, அதன் ரத்தத்தில் யோசேப்பின் அங்கியைத் தோய்த்து, யாக்கோபிடம் கொண்டுசென்று ஒரு காட்டுமிருகம் அவனைப் பட்சித்துவிட்டது என்று நம்ப வைத்தார்கள் (ஆதியாகமம் 37:31-33).
 
7. *போத்திபாரிடம் விற்கப்படுதல்:*
எகிப்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட யோசேப்பை, பார்வோனின் பிரதானியும் தலைசாரதியுமான போத்திபார் என்பவனிடத்தில் மீதியானியர்/இஸ்மவேலர்கள் விற்றார்கள் (ஆதியாகமம் 37:36, 39:1).
 
சகோதரர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்துக் கொண்டு, ஆட்டின் இரத்தத்தில் தோய்த்து, யாக்கோபிடம் கொண்டு சென்று, யோசேப்பை விற்ற சம்பவத்தை மறைத்து, “ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது” என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் (ஆதி. 37:31-34). அதனால், சகோதரர்கள்தான் யோசேப்பை விற்பதற்கான சதியை செய்தவர்கள் என்பது சந்தேகமற்றது.
 
*ஆகவே சுருக்கமாக:*
சகோதரர்கள் — சதியை செய்தவர்கள்.
மீதியானிய/இஸ்மவேல வணிகர்கள் — யோசேப்பை எடுத்துச் சென்ற வணிகர்கள்.
போத்திபார் — எகிப்தில் அவனை வாங்கியவர்.
தேவன் — இந்த முழு சம்பவத்தையும் தமது திட்டத்திற்குள் பயன்படுத்தியவர்.
 
அதனால் “சகோதரர்கள் யோசேப்பை விற்றார்கள்” என்பது சம்பவத்தின் பொறுப்பைச் சொல்லும் பொதுவான கூற்று. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும்:*

Print Friendly and PDF

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

#1246 - கணவன் மனைவி உடலுறவில் ஈடூபடுவது பாவமா? இருவரில் ஒருவர் உபவாசித்தும் ஒருவர் உபவாசிக்காமலும் இருந்து, ஒருவர் உடலுறவில் ஈடுபட விரும்புவது பாவமா?

#1246 - *கணவன் மனைவி உடலுறவில் ஈடூபடுவது பாவமா? இருவரில் ஒருவர் உபவாசித்தும் ஒருவர் உபவாசிக்காமலும் இருந்து, ஒருவர் உடலுறவில் ஈடுபட விரும்புவது பாவமா?*
 
*பதில்*:  திருமணமான தம்பதியரின் உடலுறவு பாவம் அல்ல. திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று, பாலியல் ஆசைக்கு ஒரு சரியான வடிகாலைக் கொடுப்பதாகும். 
 
விவாகமஞ்சம் என்ற தமிழ் வார்த்தை இங்கே “கொய்ட்டே” என்ற கிரேக்கச் சொல்லின் மொழிபெயர்ப்பு. அவ்வார்த்தை உடலுறவைக் குறிக்கும் ஒரு கிரேக்கச் சொல்லாகும்.  "விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்" (எபி. 13:4). 
 
திருமணத்திற்குள் உடலுறவு தூய்மையானது. 
 
ஆனால் திருமணத்திற்கு வெளியே, அது திருமணத்திற்கு முன்பான (வேசித்தனம்) அல்லது திருமணத்தின் போது உங்கள் வாழ்க்கைத் துணை அல்லாத ஒருவருடன் (விபச்சாரம்) செய்வது பாவமாகும். பாவமான உடலுறவைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக பவுல் திருமணத்தை ஆதரித்தார்.
 
திருமணத்திற்கான ஒரு உந்துதலாக  இக்காரணமும் இருப்பதால், திருமணத்தினுள் இணைந்துள்ள, உங்கள் வாழ்க்கைத் துணையைத் திருமணத்திற்குத் தூண்டிய அந்த விஷயத்தையே அவருக்கு மறுப்பது அபத்தமானதாகிறது. 
 
“உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு. உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக. உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன? மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்." (நீதி. 5:15-21). 
 
பாலுறவு என்பது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அவர்களின் பாலியல் ஆசையைத் தணிப்பதற்காக பிரத்தியேகமாக இருக்க வேண்டும். எனவே, பவுல் 1 கொரிந்தியர் 7-ல், கணவனுக்கோ மனைவிக்கோ தங்கள் சொந்த சரீரத்தின் மீது அதிகாரம் இல்லை என்று கூறினார். அவர்கள் திருமணம் செய்துகொண்டபோது, தங்களை ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுத்தார்கள்.
 
தங்களுக்குள் ஒரு இடைவெளி தேவைப்படுகிறது என்று இருவரில் ஒருவர் யோசித்தால் அது பரஸ்பர சம்மதத்துடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கவேண்டியது. (1கொரி. 7:5) 
 
திருமணமான ஒருவர் தனக்காக வாழாமல், எப்போதும் தன் வாழ்க்கைத் துணையின் தேவைகளையும் விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். 
 
கணவர்கள் தங்கள் மனைவிகளைக் கனப்படுத்த வேண்டும் என்றும் (1 பேதுரு 3:7), மனைவிகள் தங்கள் கணவர்களை மதிக்க வேண்டும் என்றும் (எபேசியர் 5:33) சொல்லப்பட்டிருக்கிறது. 
 
கணவன் அல்லது மனைவியின் ஒரு அடிப்படை மனிதத் தேவை இது. சுயநலமாக இருவரில் எவரும் இருக்க வேதம் அனுமதிக்கவில்லை. பல சமயங்களில், தம்பதிளில் ஒருவர் தனது வேறு ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள, உடலுறவை மறுப்பதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு தவறைப் பயன்படுத்தி மற்றொரு தவறைச் சரிசெய்ய முடியாது. ரோமர் 12:18-21
 
தம்பதியரில் ஒருவர் மற்றவருடன் இணங்காமல் இருக்கும் பொழுது மனம் வேதனையுடனும் தீய சிந்தையுடனும் நிறைந்திருக்க உங்களது ஜெபமும் தேவனிடத்தில் சேருவதற்கு தடையாகிறது. 1கொரி. 7:5
 
மேலும், கிறிஸ்தவத்தில் உபவாசம் என்பது போதனை அல்ல. உபவாசத்தை கொள்கையாக மார்க்க ரீதியாக கடைபிடிக்க கட்டளையிடுவதும் மற்றவர்களை கட்டாயப்படுத்துவதும் வேதத்திற்கு முரணானது.
 
அவரவர் விருப்பத்தின்படி அவரவர் தீர்மானிப்பதாகும். 
உபவாசம் இருக்கிறேன் என்று பழச்சாறும் பாலும் அல்லது ஒரு வேளை மாத்திரம் சாப்பிட்டுக்கொண்டு 3 நாள் உபவாசம், 7நான் உபவாசம், 40நாள் உபவாசம் என்று பறைசாற்றிக்கொள்வது தவறு. சரீர ஒடுக்கம் என்று சொல்லிக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.
 
நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.  அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். மத். 6:17-18. 
 
உபவாசத்தைக் குறித்த விரிவான தகவலுக்கு #906ஐ வாசிக்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

----*----*----*----*----*-----



Print Friendly and PDF

புதன், 5 ஆகஸ்ட், 2026

#1245 – கர்த்தருடைய பந்தியின் வேளையில், அப்பம் மற்றும் திராட்ச ரசத்திற்கு தனித்தனியே ஜெபிப்பது அவசியமா அல்லது ஒரே ஜெபத்தில் நடத்தலாமா?

*#1245 – கர்த்தருடைய பந்தியின் வேளையில், அப்பம் மற்றும் திராட்ச ரசத்திற்கு தனித்தனியே ஜெபிப்பது அவசியமா அல்லது ஒரே ஜெபத்தில் நடத்தலாமா?* 
 
*பதில்* : எந்த செய்கைக்கும் நாம் வேதாகம உதாரணத்தையே முன் வைத்து அதை கைக்கொள்கிறோம்.. தேவனுடைய தொழுகையில் எந்த செயலையும் சுயமாய் முடிவு எடுத்து பின்பற்றுவது ஆபத்து.
 
கர்த்தருடைய வேளையின் பொழுது, வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை கீழே பதிவிடுகிறேன்:
 
*முதல் பதிவு:*
மத்தேயு 26:26 அவர்கள் போஜனம்பண்ணுகையில், 
1) இயேசு “அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து”, 
அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
 
மத்தேயு 26:27 
2) “பின்பு”, 
“பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி”,
 அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
 
*இரண்டாம் பதிவு*:
மாற்கு 14:22 அவர்கள் போஜனம்பண்ணுகையில், 
1) இயேசு “அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து”, 
அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
 
மாற்கு 14:23 
2) “பின்பு”, 
“பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி”, 
அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.
 
*மூன்றாம் பதிவு:*
லூக்கா 22:19  பின்பு 
1) அவர் “அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி”, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
 
லூக்கா 22:20 
2) “போஜனம்பண்ணினபின்பு” 
அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
 
*நான்காம் பதிவு:*
1கொரி. 11:24 
1) ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
 
1கொரி. 11:25 
“போஜனம்பண்ணினபின்பு”, 
அவர் “அந்தப்படியே பாத்திரத்தையும்” எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
 
இப்படியாக நான்கு இடங்களிலும் தனித்தனியே செய்யப்பட்ட வகையை நான் ஏன் மீறவேண்டும்?
 
எப்படியாக
தொழுகையில்,
பாடல் பாடும்பொழுது இசைக்கருவி வாசிக்கப்படவில்லையோ, 
காணிக்கையின் போது பாடுவதில்லையோ,
அப்படியே இதையும் வசனத்தின்படி செய்வது நமக்கு வாக்குவாதமின்றி ஏற்கத்தக்கது. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* : https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

Print Friendly and PDF

திங்கள், 27 ஜூலை, 2026

#1244 - முதல் உடன்படிக்கையின் காலத்திற்கு முன்பு மரணத்திற்கு பின்னான வாழ்க்கை எங்கு செல்ல வேண்டும் என்பது எப்படி கணக்கிடப்பட்டது?

 *#1244 - முதல் உடன்படிக்கையின் காலத்திற்கு முன்பு மரணத்திற்கு பின்னான வாழ்க்கை எங்கு செல்ல வேண்டும் என்பது எப்படி கணக்கிடப்பட்டது?*
 
*பதில்* : இரட்சிப்பு எப்போதும் விசுவாசத்தினால்தான். ஆதியாகமம் 15:6
 
லூக்கா 16:19-31ன்படி ஏழை லாசரு ஆபிரகாமின் மடி (பரதீசு) சென்றான். ஐசுவரியவான் வேதனையான (பாதாளம்) இடத்திற்குச் சென்றான். இரண்டிற்கும் இடையில் பெரிய பிளவு இருந்தது.
 
இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த பிறகு இரட்சிப்பு முழுமையாக நிறைவேற்றப்பட்டது.
 
எபிரெயர் 9:15 - முதல் உடன்படிக்கையின் கீழிருந்த மீறுதல்களுக்காகவும் மீட்பை உண்டாக்கினார். அதாவது, இயேசுவின் சிலுவை பலியானது எதிர்கால மக்களுக்காக மட்டும் அல்ல, அவருக்கு முன்பு விசுவாசத்தில் வாழ்ந்தவர்களுக்கும் பொருந்தியது.
 
எபிரெயர் 11 இதை உறுதிப்படுத்துகிறது. அங்கே ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள், மோசே மற்றும் தாவீது அனைவரும் "விசுவாசத்தினாலே" நீதிமான்களாகக் கருதப்பட்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.
 
மேலும், எபிரெயர் 11:39-40ல் நாம் காண்பது “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்."
இது, பழைய ஏற்பாட்டு விசுவாசிகளின் இரட்சிப்பும் இறுதியில் கிறிஸ்துவின் கிரியையிலேயே நிறைவேறியது என்பதை காட்டுகிறது.
 
ஆகவே, சிலுவைக்கு முன்னரும், விசுவாசத்தினால் மரித்தவர்கள் பரதீசிற்கும், விசுவாசியாதவர்கள் பாதாளத்திற்கும் போவது ஊர்ஜிதமாகிறது. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +918144776229 (India) 
 
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய* :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
Print Friendly and PDF