வெள்ளி, 27 மார்ச், 2026

#1240 – தேவதூதர்களில் ஆண் பெண் என்ற வித்தியாசம் உள்ளதா?

*#1240 – தேவதூதர்களில் ஆண் பெண் என்ற வித்தியாசம் உள்ளதா?*

*பதில் :* மனிதர்களில் இனப்பெருக்கத்திற்காகவே பாலின வேறுபாடு உள்ளது. தேவதூதர்கள் இனப்பெருக்கம் செய்வதில்லை. 

பூலோகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணவனை திருமணம் செய்த பெண், பரலோகத்தில் யாருக்கு மனைவியாய் இருப்பாள் என்று யூதர்கள் கேட்டபொழுது இயேசு கிறிஸ்து சொன்ன பதில் இதற்கான நமது விடையை காணமுடிகிறது. 

மத்தேயு 22:29-33 ”இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.  உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார். ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்”.

இதனால், தேவதூதர்கள் மனிதர்களைப் போல பாலின அடிப்படையிலான வாழ்க்கையை கொண்டவர்கள் அல்ல என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

இதையே மேலும் தெளிவாக லூக்கா 20:34–36 வசனமும் உறுதிப்படுத்துகிறது: ”இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.  மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்”.  என்று தெரிவிக்கிறது.

தேவதூதர்கள் பொதுவாக ஆண் வடிவில் தோன்றுகின்றனர் — ஆனால் அவர்கள் உண்மையான மனித ஆண்கள் அல்ல.

வேதாகமத்தில் பெயருடன் குறிப்பிடப்படும் தேவதூதர்கள் ஆண்பால் பெயர்களைக் கொண்டுள்ளனர்:

1) மிகாவேல் - தானியேல் 10:13, யூதா 1:9, வெளிப்படுத்தல் 12:7

2) காபிரியேல் — தானியேல் 8:16, லூக்கா 1:19, 26

3) ஆதி. 18:2  தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று ”புருஷர்” அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து:

4) ஆதி. 19:1  அந்த இரண்டு ”தூதரும்” சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

இவர்கள் உண்மையான ஆண்களல்ல, மாறாக ஆண் வடிவில் தோன்றினர்.

மேலும், கூடுதல் தகவலாக, சகரியா (5:9) புத்தகத்தில் காணப்படும் இரண்டு “ஸ்திரீகள்” தேவதூதர்கள் என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. 

இது ஒரு தீர்க்கதரிசன தரிசனத்தில் (vision) காணப்படும் சின்னங்களாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.

சகரியா 5:9 -ல் ”அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டு வருகிற ”இரண்டு ஸ்திரீகளைக்” கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள். 

இவர்கள் தேவதூதர்கள் என்று வேதம் கூறவில்லை - ஒரு தீர்க்கதரிசனத்தில் (vision) வரும் அடையாளங்கள் மாத்திரமே. 

ஆகவே, தேவதூதர்கள் எபிரேயர் 1:14-ன் படி ஆவிக்குரிய ஜீவன்களாவர்.
அவர்களுக்கு மனிதர்களைப் போல உடலியல் பாலினம் இல்லை.
அவர்கள் ஆண் வடிவில் தோன்றுவது, மனிதர்கள் புரிந்துகொள்ளும்படி கொடுக்கப்பட்ட வெளிப்பாடு மட்டுமே; அது அவர்களின் இயல்பை குறிக்கவில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:

வலைதளம் :

YouTube “வேதம் அறிவோம்” :

-------------------------*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக