சனி, 3 செப்டம்பர், 2022

#1152 - ஆசீர்வாதம் என்றால் என்ன? உண்மையான தேவனை வணங்கும் கிறிஸ்தவர்கள் ஏன் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள்? பணக்கஷ்டம் கடன் தொல்லை என்று ஏராளமான வருத்தம் அவர்களுக்கும் உள்ளதே? விளக்கவும்.

#1152 - *ஆசீர்வாதம் என்றால் என்ன?* உண்மையான தேவனை வணங்கும் கிறிஸ்தவர்கள் ஏன் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள்? பணக்கஷ்டம் கடன் தொல்லை என்று ஏராளமான வருத்தம் அவர்களுக்கும் உள்ளதே? விளக்கவும்.

*பதில்* :  ஆசீர்வாதம் என்பது ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒன்று.

பணம் செல்வாக்கு புகழ் எல்லாம் மனிதர்கள் மத்தியில் ஏற்படுபவைகள். உலக வாழ்க்கைக்குரியவைகள்.

கிறிஸ்துவின் வருகையில் இந்த உலகமும் பூமியும் வானமும் சகலமும் அழிந்துபோகும். 2பேதுரு 3:10

ஆசீர்வாதம் என்பது ஜெபமாகவோ, வேண்டுதலாகவோ, வேதபகுதியின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளாகவும் இருக்கலாம்.

ஆசீர்வாதம் என்பது பெரும்பாலும் தேவனுடைய பாதுகாப்பு, மகிழ்ச்சி, ஞானம் மற்றும் தயவை ஒரு நபருக்கு அறிவிக்கும் நோக்கத்திற்கானது. அவை பேசப்படும் / அல்லது எழுதப்பட்டும் பெறுநருடன் பகிரப்படுகின்றது.

பழைய ஏற்பாட்டில் "ஆசீர்வாதம்" என்பது எபிரேய வார்த்தையான பராக் என்பதை மொழிபெயர்க்கிறது. அதாவது முழங்கால்படிதல்.

சிலர் வந்தாலும் போனாலும் மண்டியிடுவது வழக்கம்.

10. அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான். 1சாமு. 13:10.

"வந்தனம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை உண்மையில் பராக் என்ற எபிரேய வார்த்தையாகும்.  இது வெறும் மண்டியிட்டு வாழ்த்துதல் மட்டும் அல்ல. இது உங்களை மகிழ்ச்சியடையச் செய்த அல்லது மற்றொரு நபருக்கு நீங்கள் மகிழ்ச்சியை விரும்பும் விஷயத்தைக் குறிக்கிறது.

கிரேக்க மொழியில், "ஆசீர்வாதம்" என்ற வார்த்தை மார்க்கரியோஸ் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது நல்ல அதிர்ஷ்டம் அல்லது நன்றாக இருப்பது. மற்றொரு வார்த்தை eulogeo, அதாவது மற்றொரு நபரைப் புகழ்வது அல்லது நன்றாகப் பேசுவது போன்ற அர்த்தம் கொண்டவை.

எனவே ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும் அல்லது அவர்களைச் சிறப்பாகச் செய்யும் விஷயங்களில் அவர் ஆசீர்வதிக்கப்படுகிறார்.

ஒரு நபர் அவர்கள் செய்யும் செயல்களால் அல்லது அந்த நபருக்கு அவர் கொடுக்கும் பாராட்டுகளால் மற்றொரு நபரை மகிழ்விக்கும்போது ஆசீர்வாதங்களை வழங்குகிறார்.

ஆகவே தான் இயேசுவின் மலைபிரசங்கம் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

பெரும்பாலான மக்களின் துயரங்களை அவர் குறிப்பிட்டு அவை உண்மையில் ஆசீர்வாதங்கள் என்று கூறினார்: ஆவியில் ஏழ்மை, துயரப்படுகிறவர்கள், மற்றும் துன்புறுத்தப்படுபவர்கள் பாக்கியவான்கள் என்றார் (மத்தேயு 5:3-11).

*உங்களது இரண்டாவது கேள்விக்கான பதில்*:
யோபுவின் புத்தகம் இந்த கேள்விக்கு நம்மை தெளிவுபடுத்துகிறது.

தேவனிடத்தில் வரும் அல்லது பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதத்தால் மட்டுமே ஜனங்கள் தேவனுக்கு கீழ்படிந்திருக்கிறார்கள் என்று சாத்தான் நிரூபிக்க முயன்றான்.

யோபு 1 : 9-11 அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.  ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.

ஆகவே, யோபுவை சோதிக்க தேவன் சாத்தானுக்கு அனுமதி கொடுத்தார்.

யோபுவின் நண்பர்கள் யோபு பாவம் செய்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

ஏனென்றால் கடவுளுடைய ஆசீர்வாதங்களை நீக்கி யோபுவை தண்டிக்க ஒரே ஒரு காரணம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

நாம் அறிந்த எவரும் திடீரென்று துக்கத்தில், வியாதியில், கஷ்டத்தில், நஷ்டத்தில் அகப்பட்டால் இவ்வாறே பலரும் நினைத்துவிடுகிறோம்.

யோபுவின் சோதனைகள் அவருடைய ஆன்மீக நிலையின் நேரடி விளைவு அல்ல. அவை ஒரு சோதனையாக இருந்தன.

ஆசாபின் நினைவுகளையும் இங்கே நாம் கவனிக்கவேண்டும். துன்மார்க்கர்கள் சில சமயங்களில் மிகவும் நல்ல வாழ்க்கை வாழ்வதை அவர் கண்டார்.

”துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள் (சங். 73:3-5). என்றார்.

ஆனால் இறுதியில் அவர்களின் வெளிப்படையான வெற்றி தற்காலிகமானது என்பதை அவர் உணர்ந்தார்.

"நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன். நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்" (சங். 73:15-18) என்றார்.

ஆகவே, இப்பூமியில் ஒருவர் பண பலத்தாலும், செல்வாக்கினாலும் நிறைவதால், நீதியுடன் வாழ்வதற்காக தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறார் என்று அர்த்தமல்ல.

தேவனோ "தீயோர்மேலும் நல்லோர்மேலும் தம்முடைய சூரியனை உதிக்கச்செய்து, நீதிமான்கள்மேலும் அநியாயக்காரர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்" (மத்தேயு 5:45) என்று கிறிஸ்து சொன்னார்.

அனைத்து நல்ல ஆசீர்வாதங்களும் தேவனிடமிருந்தே வருகின்றன. யாக். 1:17

எனவே நம்மை நாம் ஆசீர்வதிக்கப்பட்டதாகக் காணும்போது, பிதாவானவர் நம் மீது வைத்த கிருபையினாலேயே என்பதை உணர்கிறோம்.

(நேர்மையான வழியில்) பணம் ஈட்டுவதில் உள்ள திறமைகளைப் பயன்படுத்துவதற்கான திறமைகளும் வாய்ப்புகளும் கிடைப்பது தேவனுடைய கிருபையால் மாத்திரமே.

ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; *அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்*. பிர. 9:11

கிறிஸ்தவனாகிவிட்டால் பணத்தால் நிறைப்பேன் என்று வேதம் எங்கும் கூறவில்லை!! நேர்மாறாக, உலகத்திலுள்ளவைகளை நேசிக்காமல் சகலவற்றையும் விற்று ஜனங்களுக்கு கொடுத்துவிட்டு கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்ததையே உதாரனமாக ஆதி கிறிஸ்தவர்கள் செய்தது நமக்கு பெரிய பாடம். அப். 2:44; 4:35-37

அநுதின வாழ்விற்கு தேவையானதை தேவன் நமக்குத் தந்தருளுகிறார். மத். 6:25-34

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?  …. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?  …. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்… ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

அதையும் கடந்து எதிர் கால வாழ்விற்கு தேவையானதை சேகரிக்க துவங்கி தனது வாழ்க்கையையும் கடந்து பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மற்றும் சந்ததிக்கே சேர்க்கும் ஆவலில் நீதியை கைவிட்டு துன்மார்க்கத்தில் சென்றால் அதில் நிச்சயம் வேதனை உண்டு. நீதி. 10:22

தேவன் ஒருபோதும் போராட்டங்களிலிருந்து விடுதலையை வாக்களிக்கவில்லை, உண்மையில் அதற்கு நேர்மாறானது.

யாக்கோபு 1:2-4 வசனங்களில் ”என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது” என்றும்

1பேதுரு 1:6-9ம் வசனங்களில் ”இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்” என்றும் காண்கிறோம்.

தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாய் வாழ்ந்த தாவீது வாழ்க்கையில் போராடிக்கொண்டேயிருந்தார். அதில் வெற்றியாளனாயும் இருந்தார். முறையாய் போராடினால் வெற்றிக்காண தேவன் உதவி செய்வார் என்பதில் சந்தேகமில்லை.

தேவனுடைய தாசர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யோபு, யோசேப்பு, தாவீது, புதிய ஏற்பாட்டின் யோசேப்பு, பர்னபா போன்றோர் செல்வந்தர்களாகவே வாழ்ந்தனர்.

ஐசுவரியம் தவறு அல்ல.. அதை எவ்வாறு சம்பாதிக்கிறோம் எதற்காக சேர்க்கிறோம் என்பதில் ஆசீர்வாதம் உள்ளது.  

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக