#994 - *தேவன் தரும் ஆசீர்வாதம் எது?*
விசுவாசிகள் அநேகருக்கு தொழில், வீடு, இன்னும் பிற வசதிகள் இல்லை...பணம் தான் ஆசீர்வாதம் என நினைக்கும் சில புறஜாதி மக்களுக்கு சரியான பதில் எப்படி சொல்வது...?
*பதில்*
புறஜாதி என்று வேதாகமத்தில் சொல்லப்படுவது – இஸ்ரவேலர் அல்லாத மற்ற அனைத்து மக்களையும் !!
மோசேயின் நியாயபிரமாணத்தின்படி நாம் அனைவருமே புறஜாதியினரே.
கேள்வியில் புறஜாதி என்று கேட்டிருப்பது கிறிஸ்தவர் அல்லாதவர் என்று அர்த்தங்கொள்ளவும்.
*தேவன் தரும் ஆசீர்வாதம் எது?*
நீடிய ஆயுள், சுகமான வாழ்வு, ஐஸ்வரியம், மேன்மையான வாழ்க்கை, உயர்ந்த பதவி, அநேக வேலையாட்கள், பொிய கம்பெனிக்கு முதலாளியாவது, சொத்துக்கள், பணம் – இவை அனைத்தும் இந்த பூமியோடு அழிந்து விடும் !!
தேவனை தேடுபவர்களுக்கு – அவர் தரும் ஆசீர்வாதமோ – அழியாதது. அவர் தரும் ஆசீர்வாதம் : நித்திய ஜீவன் !! யோ. 3:16
அவரை அண்டி வாழும் போது – நம் தேவை அனைத்தையும் அவர் கவனிக்கிறவராக இருக்கிறார். மத். 6:25, 32
கிருபையும் அமைதியும் தருகிறார். எபே. 1:2, 7-8
பரலோகத்தின் இராஜாதி இராஜாவான நம் தேவனால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பரலோக வாழ்க்கைக்கென்று தீர்மானிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். எபே. 1:3-4, 11
பாவியாக இருந்து செய்த பாவத்திற்கு நம்மை தண்டனைக்குள்ளாக்காமல் நம்மை பரலோக வாழ்க்கைக்கென்று மன்னித்து, இலவசமாய் மீட்டெடுத்தார். எபே. 1:7, ஏசாயா 52:3,9
நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன. எபேசியர் 1:7
கிறிஸ்து நம்மை சூழ்ந்து கொள்கிறார். கலா. 3:27
பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாகிறோம். 1கொரி. 6:19.
பரிசுத்த ஆவியினால் அவருக்குள் முத்திரை போடப்படுகிறோம். எபே. 1:19
சர்வலோகத்தை உண்டாக்கினவரும் வானங்களில் தன் சிங்காசனத்தை அமைத்து சர்வத்தையும் ஆள்கிறவருமானவரின் பிள்ளைகளாகிறோம். யோ. 1:12
இப்படியாக தேவனுடைய ஆசீர்வாதத்தை பட்டியலுக்குள் அடக்கமுடியாத எண்ணுக்கடங்கானதாக உள்ளது.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபே. 1:3
அழிந்து போகும் ஆசீர்வாதத்தை நாம் காணாதபடிக்கு உன்னதமான நிலைவரமான நித்தியமான ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம். அப்போது இந்த குறுகிய ஜீவனுக்கேதுவானவற்றையும் அவர் நமக்கு தந்தருளுவார்.
அழிந்து போகிற இந்த பூமிக்குரியவைகளான ஆசீர்வாதங்களையெல்லாம் அஞ்ஞானிகள் (தேவனை அறியாதவர்கள்) நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு (தேவ பிள்ளைகளுக்கு) வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். மத். 6:32-34
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக