வெள்ளி, 4 அக்டோபர், 2019

#530 - பாஸ்டர் மட்டும் தனியாக அப்பம் பிட்டு, பானம் செய்து விட்டு, பிறகு அவர் மட்டும் காணிக்கை செலுத்தி விட்டு செல்கிறார்...

 #530 - *பாஸ்டர் மட்டும் தனியாக அப்பம் பிட்டு, பானம் செய்து விட்டு,  பிறகு அவர் மட்டும் காணிக்கை செலுத்தி விட்டு செல்கிறார்*.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு சபைக்கு சென்றிருந்தேன் (தங்களை உண்மையான சபை என்று சொல்லிக்கொள்பவர்கள்) அங்கு;

வாரத்தின் முதலாம் நாள் கூடுகையில் : ஒரு ஊழியர் தன் தனிப்பட்ட வேலையின் காரனமாக அவர் மட்டும் தனியாக முதலில் ஜெபம் செய்து

பிறகு அவர் மட்டும் தனியாக அப்பம் பிட்டு, பானம் செய்து விட்டு,

பிறகு அவர் மட்டும் காணிக்கை செலுத்தி விட்டு,

பிறகு சபையாருக்கு செய்தி பிரசங்கம் செய்து விட்டு  சகோதரர் ஒருவரை தொடர்ந்து வழிநடத்த சொல்லிவிட்டு அவர் வேலைக்கு சென்றுவிட்டார்.  

உங்களுக்கும் இப்படி அவசரம் என்றால் செய்துக்கொள்ளலாம் என்று மேற்கோள் காட்டுகிறார். வழிநடத்திய சகோதரர் தொடர்ந்து சபையாருடன் திருவிருந்து, காணிக்கை உள்ளிட்ட பகுதிகளை வழிநடத்தி நிறைவுசெய்தார்,

அதில் அவர் குறிப்பிட்ட சில தகவல்கள்

முழங்காலில் ஜெபிப்பது தான் பக்தி விருத்தியை அதிகரிக்கும் என்றார்.

பாடல் பகுதியில் பாடப்படும் 5 பாடல்களில் 5 வதாக  பாடப்பட ஒரு குறிப்பிட்ட பாடலையும், காணிக்கை பகுதி முடிந்து நிறைவு ஜெபம் முடிந்தவுடன் வோறொரு  குறிப்பிட்ட பாடலை தேர்வு செய்து இவ்விரு பாடல்களையும் ஒவ்வொரு வார கூடுகையிலும் கட்டாயம் மாற்றாமல் பாட வேண்டும் என்கிறார்.

மேலும் இச்செயல் குறித்து பேசியபோது, மிக வேதனையாய் பதிலளித்தார்.

அவர் சொன்னதில் சில இவ்வாறு சபையின் முறைகளை மாற்றும்போது சபைக்கு தெரியபடுத்தவேண்டும் என அவர் சொன்னதற்கு அந்த ஊழியர் இங்கு இப்படிதான் நடக்கும் நீங்கள் வேண்டுமென்றால் உங்களுக்கு பிடித்த சபைக்கு போங்கள் என்கிறார்.

மேலும் இப்படியாக பாடலை பாடும்போதுதான் பக்தி உண்டாவதாகவும்  சொல்கிறார். இப்படி இன்னும் அனேகம் உள்ளது...

இவைகளை பார்க்கும்போது ஏனோமனம் தவறாக உணர்ந்தது, இவ்விதமாக செய்ய வேதம் அனுமதிக்கிறதா?  இவைகளை குறித்து விளக்கம் தாருங்கள் சகோதரரே.

*பதில்*
தனிப்பட்ட ரீதியில் கட்டுரையாக இதற்கு விளக்கம் கேட்டிருந்தீர்கள். இந்த பிரச்சனை அநேக சபைகளில் இருப்பதால் இங்கு பதிவிடும் போது பலருக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வேதத்தின்படி ஒரு சபையின் நிர்வாக அமைப்பு இல்லையென்றால் இவ்வாறு குளறுபடிகள் நிச்சயம் காலப்போக்கில் நடக்கும்.

மூப்பர்கள், ஊழியர்கள், உதவிகாரர்கள் என்ற அமைப்பு வளரும் சபைக்கு மிகவும் அவசியம். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள நிர்வாக கட்டமைப்பை கீழே கவனிக்கவும்:

சபை என்பது கிறிஸ்துவின் ராஜ்யமாகும். அதில் கிறிஸ்து ராஜாவாக ஆட்சி செய்கிறார் (1தீமோத்தேயு 6:15; யோவான் 18:37; யோவான் 19:19).

கிறிஸ்தவர்கள் இந்த ராஜ்யத்தில் குடிமக்கள் (கொலோசெயர் 1:13; எபிரெயர் 12:28; வெளிப்படுத்துதல் 1: 9).

உலகமே இந்த ராஜ்யத்தின் பிரதேசமாகும் (மத்தேயு 28:19; மாற்கு 16:15; அப்போஸ்தலர் 1: 8).

புதிய பிறப்பு இந்த ராஜ்யத்தில் நாம் நுழையும் வழி (யோவான் 3: 5).

*ஒரே தலை, ஒரே ராஜா – கிறிஸ்து*
சபை என்பது கிறிஸ்துவின் சரீரம்.
கிறிஸ்து அதன் ஒரே தலை (எபேசியர் 1: 22-23; 4: 4).
அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு (மத்தேயு 28:18; கொலோசெயர் 1:18).

இந்த அதிகாரத்தை அவர் வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. கிறிஸ்து தலைவராக இருப்பதால், அவரிடமிருந்து நம்முடைய கட்டளைகளை பெற்றுக்கொண்டு கீழ்படிகிறோம்.

அவர் ராஜா என்பதால், நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் (எபேசியர் 5:24).

சபைக்கு பூமிக்குரிய தலைமையகம் இல்லை.

கிறிஸ்துவின் சபைக்கு தலைமையகம் பரலோகத்தில் உள்ளது. கர்த்தருடைய சரீரமாகிய சபையாக இருக்கும் ஒவ்வொரு சபையும் சுயாதீனமானவை.  சுயராஜ்யம் கொண்டவை. போப் முறையோ மாவட்டத்திற்கு ஒரு பிஷப் முறையோ, கிறிஸ்தவ சங்கங்களோ சபையை கட்டுபடுத்த முடியாது.

ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்கள் நியமிக்கப்பட வேண்டும் (அப்போஸ்தலர்
14:23; தீத்து 1: 5).

புதிய ஏற்பாட்டில், மூப்பர்கள் - சங்கத்தார் என்றும் அழைக்கப்படுகிறார்கள் (1தீமோத்தேயு 4:14); கண்காணிகள் (பிலிப்பியர் 1: 1; 1தீமோத்தேயு 3: 1-2); மேற்பார்வையாளர்கள் அல்லது கண்காணிகள் (அப்போஸ்தலர் 20:28; 1​​பேதுரு 5: 2); போதகர்கள் (எபேசியர் 4: 11,12); மேய்ப்பர்கள் (1பேதுரு 5: 1-4) என்றும் அழைக்கப்படுகிறார்கள். பாஸ்டர் (மேய்ப்பர்) என்பவர் மூப்பர்.

புதிய ஏற்பாட்டில் உபதேசிக்கிறவர்கள் ஒருபோதும் போதகர்கள் (பாஸ்டர்) என்று அழைக்கப்படுவதில்லை.

சபையின் மூப்பர்கள் ஒவ்வொரு உள்ளூர் சபையின் போதகர்கள் (மேய்ப்பர்கள்) (1பேதுரு 5: 1-4).  பல சபைக்கு ஒரு பிஷப் என்றோ மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறை வேதத்தில் இல்லை.

மூப்பர்களுக்கான தகுதிகள்
1 தீமோத்தேயு 3: 1-7 மற்றும் தீத்து 1: 5-13 ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளன.

உண்மையுள்ள கிறிஸ்தவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு மூப்பரானவர் ஒரே மனைவி மற்றும் உண்மையுள்ள குழந்தைகளைக் கொண்ட ஆணாக இருக்க வேண்டும்.

அவர் ஒரு புதிய உறுப்பினராக இருக்க முடியாது. சகல தகுதியுடையவராக இருக்கவேண்டும்.

மேலும், சபையில் மூப்பர்கள் ஒருவராக அல்ல ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்க வேண்டும்.

வேதாகமம் - மூப்பர்கள் கண்காணிகள் உதவிஊழியர்கள் என்று பன்மையிலேயே (அப்போஸ்தலர் 14:23; 20: 17-18, 28) என்றே எல்லா இடத்திலும் கூறுகிறது.

இந்த மூப்பர்கள் தேவனுடைய மந்தையை வழிநடத்துவதும், பாதுகாப்பதும், போஷிப்பதும், நிர்வாகம் செய்வதும் அவர்களுடைய வேலை ஆகும் (1 பேதுரு 5: 1-4; அப்போஸ்தலர் 20:28; 1 ​​தீமோத்தேயு 5:17; எபிரெயர் 13:17).

*உதவி ஊழியக்காரர்கள்*
ஒவ்வொரு சபையிலும்
உதவி ஊழியக்காரர்கள் நியமிக்கப்பட வேண்டும் (பிலிப்பியர் 1: 1). அவர்களின் தகுதிகள் 1 தீமோத்தேயு 3: 8-13-ல் பட்டியலிடப்பட்டுள்ளன. அப்போஸ்தலர் 6: 1-6-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி உதவி ஊழியக்காரர்கள் வேலையும் அடங்கும். மேலும் உதவி ஊழியக்காரர்கள் ஆண்களாக மட்டுமே இருக்க முடியும்.

பெண்கள் "ஒரே மனைவியின் கணவனாக" இருக்க முடியாது என்பதால் (1 தீமோத்தேயு 3:12) பெண்கள் உதவி ஊழியக்காரர்கள் இருக்க தகுதியற்றவர்கள்.

*பிரசங்கியாளர்கள்*
"வார்த்தையை பிரசங்கிக்க" பிரசங்கியாளரின் பொறுப்பு உள்ளது (2 தீமோத்தேயு 4: 1-5).

மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் போலவே, பிரசங்கியாளர்கள் ஆண்களே (1 தீமோத்தேயு 2: 8-15).

அவர்கள் சுவிசேஷகர்கள், தேவனுடைய வார்த்தையின் ஊழியர்கள் (2 தீமோத்தேயு 4: 5). புதிய ஏற்பாட்டில், பிரசங்கியளர் ஒருபோதும் “பாஸ்டர்,” “ரெவரெண்ட்,” “டாக்டர்,” அல்லது “பிதா (ஃபாதர்)” (மத்தேயு 23: 8-12) போன்ற தலைப்புகளால் அழைக்கப்படுவதில்லை.

எந்த ஒரு சபைக்கும் நானே ராஜா நானே மந்திரி என்று இருக்கும் பட்சத்தில் தாங்கள் நினைப்பதை சட்டமாக்கி கொள்வார்கள். அது வேதத்திற்கு முரணானது.

சபையாரும் தவறான பாதையையே பின்பற்றுவார்கள்.

கர்த்தருடைய பந்தி என்பது ஐக்கிய பந்தியுமாகும் – சபையாரோடு சேர்ந்து எடுத்தல் அவசியம். – 1கொரி. 10:16-17

சபை கூடிவரும் நேரத்தில் அவர்களோடு இருக்கமுடியாமல் அவசரபடும்படியாக  பணம் ஈட்டும் வேலை மிக முக்கியமாக கருதுபவர் எப்படி சத்தியத்திற்கு கீழ்படிந்து சபையை சத்தியத்தில் நடத்துவார்?  சூழ்நிலையை உணர்த்திய போதும் அது சரி என்று வாதாடுபவர் – தவறான மனநிலையில் இருக்கிறவர் என்பதை தெளிவு படுத்துகிறது.

முன்மாதிரியாக நடக்கவேண்டியது கடமையாயிற்றே (கலா. 4:12)

சம்பாதிப்பதற்காக அல்லது பதவி ஏற்பதற்காக லாபத்திற்காக வேதத்தை அவசர அவசரமாக படித்து பட்டம் வாங்கிகொண்டு ஊழியக்காரராக இல்லாமல் *ஊதியக்காரராக* அநேகர் இருப்பது வேதனையிலும் வேதனை.  இவர்களிடமிருந்து உண்மையான சத்தியத்தை அல்ல பிரிவினையையே குடும்பத்திலும் சமுதாயத்திலும் அந்த சபையார் கற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை – 2தீமோ. 3:8-9

திராட்சைபழ இரசத்திற்கு பதிலாக ஆரஞ்சு பழ இரசத்தை கொண்டு வந்து கொடுக்க முயன்ற ஊழியரையும் நான் அறிந்திருக்கிறேன். இரசம் பிழிய நேரம் இல்லையென்று திராட்சை பழத்தையே ஆளுக்கு ஒன்றாக வினியோகித்த ஒரு ஊழியரை குறித்தும் அறிந்திருக்கிறேன். 2பேதுரு 3:17, தீத்து 3:10 நல்ல கிறிஸ்தவருக்கு உரிய போதனை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக