சனி, 11 ஏப்ரல், 2026

#1242 – ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நீங்கள் உங்கள் மகன் திருமணத்தை நல்ல பெரிய முகூர்த்த நாளில் தானே வைத்திருக்கிறீர்கள்? இனி எப்படி வேதாகமத்தைப் போதிப்பது? தவறு தானே

#1242 – *ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நீங்கள் உங்கள் மகன் திருமணத்தை நல்ல பெரிய முகூர்த்த நாளில் தானே வைத்திருக்கிறீர்கள்? இனி எப்படி வேதாகமத்தைப் போதிப்பது? தவறு தானே*.
 
*பதில்* : எனது நண்பரும் ஊழியருமானவர் தன்னிடம் இதைக் குறித்து கேட்டதாக என்னிடம் நேரடியாய் பேசினார். 
 
நாள் நட்சத்திரம் குல கோத்திரம் ஜாதி பிரிவு என்ற எவ்வித பாகுபாடும் இந்துக்களினுடையது. கிறிஸ்துவுக்குள் வாழும் எவரும் இவற்றை பார்த்து தனது வாழ்க்கையை அமைக்க நினைப்பவர்கள் – கிறிஸ்துவிற்குள் வரவேண்டும். 
 
உள்ளுர் மாத்திரம் அல்லாமல் பிற மாநிலங்கள், மாவட்டங்கள், தேசங்கள் என்று அனைவரும் பிள்ளைகள் முதற்கொண்டு கலந்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் பரீட்சை காலங்கள் முடிந்த பின்னர் கடைசி வாரம் ஏப்ரல் மாதத்தில் எனது மகனுடைய திருமண தேதி அமையவேண்டும் என்று கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தீர்மானம் செய்யப்பட்டது. 
 
கடைசி வாரத்தில் ஒரு நானை தேர்வு செய்யலாம் என்று தீர்மானித்த பொழுத வாரத்தில் நடுநாளான புதன் கிழமை வைக்கலாமா என்று பெண் வீட்டார் கேட்டபொழுது இரண்டு காரணங்களை முன்னிட்டு நான் வேண்டாம் என்றேன்.
 
ஒன்று – ஊழியர்கள் பெரும்பாலும், அவரவர்கள் சபையில் வாரத்தின் மத்திய நாளில் ஏதாவதொரு நிகழ்ச்சி வைத்திருப்பார்கள். ஆகவே, பலர் வருவது தடைபடலாம்.
 
இரண்டாவது – வழக்கமாக பொன்னு வந்தாலும் புதன் வராது என்ற ஒரு பழமொழியை நினைத்து – புதன் கிழமையில் வேண்டாம் என்றேன். 
 
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வேதாகம வகுப்பு பலர் வைத்திருப்பதால் வியாழக்கிழமையை தேர்ந்தெடுத்தோம்.
 
பேதுருவை பார்த்து பவுல் நேரடியாய் கேட்ட உதாரணம் (கலா. 2:11) ஊழியர்களுக்கு ஒரு பாடம். அதை கடைபிடிப்பது தமிழ்நாட்டில் ஒரு சதவீதம் கூட இருப்பார்களா என்பது எனக்கு சந்தேகம் தான். 
 
இந்த தேதியைக் குறித்து என்னிடம் நேரடியாய் கேட்காமல், பலரிடம் இதைக் குறித்து புறங்கூறியவர்களுக்கு நாங்கள் குறித்த திருமணத் தேதி ஒரு முகூர்த்த நாள் என்று எப்படி அறிந்தார்கள்? அவர்களுக்கு அதனைக்குறித்த ஒரு தேடுதல் இருந்திருக்கிறதே என்பதை நினைத்து நான் சிரித்துக்கொண்டேன்.
 
ஒரு ஊழியரைக் குறித்த எந்த தவறான செயலையும் நேரடியாய் அவரிடமே தொடர்புக் கொண்டு விசாரித்து கண்டிக்கத் தெரியாத கோழைகள், வேத வசனத்தை தனது சபையாருக்கு  கண்டிப்பாய் போதிப்பது எப்படி?
 
சம்பந்தப்பட்டவர் அந்த இடத்தில் இல்லாத பொழுது அவரைக் குறித்து மற்றவர்களிடம் (புரளியாய்) பேசும் கலாச்சாரம் பெருகி உள்ளது. வேதம் அதற்கு எதிர்மறை தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 
 
நீதி. 10:18  பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.
 
சங். 15:1-3 கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
 
இன்று நான் இந்தியா வந்தவுடன் இருவர் என்னை தொடர்புக்கொண்டு இதைக் குறித்து அவர்களிடம் சில ஊழியர்கள் பேசினதை எனக்கு தெரியப்படுத்தியாதால், இந்த பதிவை கேள்வி பதிலின் பதிவாகவே அனைவருக்கும் தெளிவுப்பத்தியும் தெரியப்படுத்தவேண்டியதும் எனது கடமை என்பதால் இதை இங்கு பதிவிடுகிறேன்.
 
எந்த நபரைக் குறித்த தகவல்களையும் சந்தேகம் அல்லது குற்றம் என்று தோன்றினால் - நேரடியாய் நாம் பேசவேண்டும். அது கிறிஸ்தவனுக்கு அவசியம். புறங்கூறுவது அல்ல! 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
 ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
தொடர்பு : +91 81 44 77 6229

Q&A Biblical Whatsappல் இணைய (locked group) : https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

வலைதளம் : www.kaniyakulamcoc.blogspot.com


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக