வெள்ளி, 10 மார்ச், 2023

#1182 - சரீரம் மண்ணிற்குப் போனபிறகு, பாதாளத்தில் இருந்த ஐசுவரியவானின் ஆத்துமாவிற்கு கண்கள் எப்படி வந்தது? நாவு எப்படி வந்தது?

#1182 - *சரீரம் மண்ணிற்குப் போனபிறகு, பாதாளத்தில் இருந்த ஐசுவரியவானின் ஆத்துமாவிற்கு கண்கள் எப்படி வந்தது? நாவு எப்படி வந்தது?*  

ஆவி, ஆத்துமா, சரீரம் இவைகளில் ஒரு மனிதன் மரணம் அடையும்போது, ஆவி தன்னைத்தந்த தேவனிடம் திரும்புகிறது, சரீரம் மண்ணுக்கு போகிறது, ஆத்துமாவிற்கு தற்காலிகமாக இளைப்பாற பரதீசு அல்லது பாதாளம் வைக்கப்பட்டுள்ளது. சரீரம் மண்ணிற்குப் போனபிறகு, பாதாளத்தில் இருந்த ஐசுவரியவானின் ஆத்துமாவிற்கு கண்கள் எப்படி வந்தது? நாவு எப்படி வந்தது? சரீரம் எப்படி அக்கினிஜுவாலையில் வேதனைப்பட முடியும்? (லூக்கா 16:23,24)

*பதில்* : பதிலளிக்க தாமதமானதற்கு மன்னிக்கவும். பயணம் மற்றும் இந்த கேள்வியின் முக்கியத்துவத்தை அறிந்து சமயம் அவசியப்பட்டது.

பாதாளத்தில் (அல்லது அக்கினி கடலில்) வாழும் அனுபவத்தைப் பற்றி வேதம் நமக்கு மிகக் குறைவான விவரங்களையேத் தருகிறது. ஆனால் நிச்சயம் அந்த அனுபவத்தில் கந்தக நெருப்பு மற்றும் கடுமையான வெப்பம் (மத். 3:12, வெளி. 14:10, லூக்கா 16:24) மற்றும் தொடர்ச்சியான வேதனையை (லூக்கா 16:23, வெளி. 14:11) உள்ளடக்கியது என்பதை நாம் இவ்வசனங்களின் மூலம் அறிவோம்.

பாதாளத்தில் சேர்பவர்கள் ஆவி வடிவில் மட்டுமே இருக்கிறார்கள். ஏனெனில் சரீரமான இந்த உடல் நித்திய மண்டலத்திற்குள் செல்வதில்லை.

வெளிப்படையாக, சரீர உடல்கள் எவ்வாறு துன்பத்தை அனுபவிக்கின்றனவோ  அவ்வாறே ஆவிகள் துன்புறுத்தப்படுவதற்கு நரகம் திறன் கொண்டது.

இருப்பினும் இது ஒரு அனுமானம் மட்டுமே. இது எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நமக்கு உறுதியான புரிதல் இல்லை என்றாலும், அது நடக்கும் என்பதை வேதத்திலிருந்து அறியலாம்.

*சரீரம் இல்லாத ஆவி வடிவத்தில் கண்கள் மற்றும் நாவு எவ்வாறு வந்தது?*
இந்த கேள்விக்கு நேரடியான வசனக்குறிப்பு இல்லையென்றாலும் மற்ற சம்பவங்கள் மூலம் துல்லியமாக அறியமுடிகிறது.

*கண்கள்*
சவுலை சாமுவேல் சந்தித்த போதும் (1சாமு. 28:15),
இயேசு கிறிஸ்துவை மோசே மற்றும் எலியா சந்தித்த போதும் (மாற்கு 9:4),
தூதர்களின் நிமித்தம் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும் என்று 1கொரி. 11:10ன் வசனத்தின்படியும் அவர்களால் பார்க்க முடிந்தது என்பது நிரூபனம் ஆகிறது. அவ்வாறே பாதாளத்தில் இருந்த ஐசுவரியவானுக்கும் இருந்திருக்க வேண்டும்.

*நாவு*
தனது உலக வாழ்க்கையைக் குறித்த சகல நினைவுகளும்,
தனது ஐந்து சகோதரர்களது (எண்ணிக்கையின் துல்லியத்தை கவனிக்கவும்) இரட்சிப்பற்ற வாழ்க்கையும்,
தரித்திரனான லாசருவையும் அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்த அந்த ஐசுவரியவானின் நினைவுகள் முழுமையாய் இருப்பதால்;
சொல்லமுடியாத தனது வேதனையை விவரிக்கவும் முடியாத மிகக்கொடிதான அந்த தீப்பிழம்புகளில் கதறிக்கொண்டிருக்கும் அச்சூழ்நிலையில் – ஒரு சொட்டு தண்ணீர் எந்த வகையிலும் பிரயோஜனமில்லை என்று அறிந்தாலும்;
அந்த ஒரு சொட்டாவது தனக்கு கிடைக்காதோ என்ற அந்த ஏக்கத்தின் வாக்கியத்தைக் கவனிக்கும் போது - தனது நாக்கைக் குறித்து அவன் சொன்னது தனது உலக வாழ்வின் நினைவுகளால் வேதனையை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு ஒப்பனையான குறிப்பாகவே நான் காண்கிறேன். (லூக்கா 16:27, 30, 24)

கிறிஸ்துவின் வருகைக்கு பின்னர் நமக்கு அழிவில்லாத சரீரம் கொடுக்கப்படுகிறது. 1கொரி. 15:42, 44, 46

*கூடுதல் தகவல்*
ஐசுவரியவான் மற்றும் லாசருவைக் குறித்த இந்த பதிவு தீவிரமானது மற்றும் நிதானமானது.

பதின்மூன்று சுருக்கமான வசனங்களில், தேவனை அறியாதவர்களுக்கும் அவருக்குக் கீழ்ப்படியத் தவறியவர்களுக்கும் எதிராக லூக்கா தேவனுடைய "வரவிருக்கும் கோபத்தை" காட்டுகிறார். (லூக்கா 16:19-31)

ஒரு கணம், தேவன்; நம் ஒவ்வொருவரது வாழ்க்கையின் மறுபக்க உலகத்தில் என்ன அல்லது எப்படி முடிவடையும் என்பதைப் பார்க்க இதன் வழியாய் நம்மை அனுமதிக்கிறார்.

ஐசுவரியவான் ஜீவனுடன் அந்த பாதாளத்தில் இருக்கிறான், இறந்த பிறகும் அங்கு சுயநினைவுடன் இருந்தான். (லூக்கா 16:22-23)

சரீர மரணத்திற்குப் பிறகு, ஐசுவரியவானுக்கு தான் யார், எங்கு இருக்கிறோம் என்பது அவனுக்கு தெரிகிறது. அவன் வேதனையில் இருந்தான், தான் ஏன் அங்கு வந்தான் என்பதும் அவனுக்குத் தெரிகிறது.

வாழ்க்கையின் மறுபக்கத்தில் உலகத்தில் வாழ்ந்த நினைவுகள் மிகவும் தெளிவான உயிரோட்டத்துடன் இருக்கிறது.  

உலக வாழ்க்கையை நினைவுகூர ஐசுவரியவானுக்கு சொல்லப்படுகிறது. (லூக் 16:25)

ஐசுவரியவான் தேவனையும் பிச்சைக்காரனான லாசருவையும் நினைவுக் கூர்கிறான்.

வேதாகமம் மனித மொழியில் எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத, ஆன்மீக மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை இயற்கையான சொற்களில் விவரிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மனிதனின் அனுபவத்தின் அடிப்படையில் தேவன் மனிதனுடன் தொடர்பு கொள்கிறார்.

இரட்சிக்கப்படாத ஆத்துமா ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. அந்த ஆத்துமா என்றென்றும் தீயில் எரிக்கப்படுகிறது. ஆனால் பாதாளத்தில் உள்ள ஐசுவரியவான் மன வேதனை மற்றும் சகல நினைவுடனான தார்மீக துன்பங்களுக்கு இந்த வசனங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மரித்த பின்னர் மறுவாழ்வு உண்டு என்பதைக் குறித்து யோபு நம்பினார் (யோபு 19:25-26); தானியல் நம்பினார் (தானி. 12:2); தாவீது நம்பினார் (2சாமு. 12:23); ஆபிரகாம் நம்பினார் (எபி. 11:19); பழைய ஏற்பாட்டில் பல பரிசுத்தவான்கள் நம்பினர் (எபி. 11:35); மார்த்தாள் நம்பினார் (யோ. 11:24); பரிசேயர்களில் பலர் நம்பினர் (அப்போஸ்தலர் 23:6-8).

இச்சூழ்நிலையை நினைத்துப் பார்க்கும் போது கஷ்டத்தில் அல்லது வெறுப்பில் இவ்வுலகத்தில் வாழ்ந்தாலும்; தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இருப்பவர்களை நான் நினைக்கிறேன்.

கயிற்றினாலோ, மாத்திரைகளாலோ, விஷம் அருந்தியோ, உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, வாகனத்தில் அடிப்பட்டோ, ரயில் முன்பு பாய்ந்தோ, கழுத்தை/ நரம்புகளை அறுத்துக்கொண்டோ, எவ்வழியிலோ, அல்லது துப்பாக்கியை எடுத்து தலையில் வைத்து, வாழ்க்கை அனைத்தையும் முடித்துவிடலாம் என்று பல வகையில் பலர் நினைக்கிறார்கள். ஆனால், பரிதாபம் என்னவென்றால் அவர்கள் அந்த முடிவை எடுத்த அந்த க்ஷ்னத்தில் தானே, அவர்கள் ஐயோ வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லை என்பதையும் இனி உள்ள நித்திய நரக வாழ்க்கை அதைவிட மிகக் கொடிதான நாட்களுக்குள் தள்ளப்பட்டதையும் அவர்கள் உணர ஆரம்பிக்கிறார்கள்.

இவ்வுலக வாழ்க்கையை சொந்த முடிவில் தானே எடுத்துக்கொண்டு உலகை விட்டு "வெளியேற" முயற்சி செய்யலாம் ஆனால் அவர்கள் வெளியே வருவதற்குப் பதிலாக பாதாளத்தினுள் "உள்ளே" இருப்பதைக் காண்கிறார்கள்.

பூமிக்குரிய வாழ்க்கை பிச்சைக்காரனுக்குத் துன்பத்தைத் தந்தது. ஆனால் வாழ்க்கையின் மறுபக்கத்தில் லாசரு ஆறுதல் அடைந்தார். அவர் பரதீசுவில் இருந்தார்.

ஐசுவரியவான் பாதாளத்தில் துன்புறுத்தப்பட்டார். (லூக். 16:24)

வாழ்க்கையின் மறுபுறம் கிறிஸ்துவின் முன்னிலையில் வெகுமதி பெறுபவர்களும் இருக்கிறார்கள், பயங்கரமான தீப்பிழம்புகளில் வேதனைப்படுபவர்களும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையின் மறுபக்கத்தில் இரட்சிப்பு மற்றும் கண்டனம் என்ற இரண்டு தனித்துவமான உலகங்கள் உள்ளன.

சிலருக்கு நித்திய ஜீவனும் சிலருக்கு நித்திய தண்டனையும் உண்டு. (மத். 25:46)

இந்த உலகம் அழிந்துவிட்டால் அல்லது வாழ்க்கைக்கு பிறகு, ஒன்று நாம் இரட்சிக்கப்படலாம் அல்லது அனைத்தையும் இழக்கலாம். தேர்வு நம்முடையது.

இப்போது கடவுள் தேவையில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், விரைவில் நீங்கள் அத்தகைய தேவையைப் பார்ப்பீர்கள்.

பாதாளத்தில், ஐசுவரியவான் தனது வாழ்க்கையில் தேவனை தேடாமல், கீழ்படியாமல் இருந்ததையும் அதற்கான தனிப்பட்ட மற்றும் தெளிவான தேவையை நிராகரித்ததையும் அங்கீகரித்தார்.

தன் நாவைக் குளிர்விக்க ஒரு சொட்டுத் தண்ணீரைக் வேண்டினான். (லூக்கா 16:24)
நரகத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியவில்லையே என்ற தனது தேவையைப் பார்ப்பார்கள்.

அவர்கள், "எனக்கு தேவன் தேவை, ஆனால் அது மிகவும் தாமதமாகிவிட்டதே" என்று கதறுவார்கள்.

ஆகவே, இப்போதே, இவ்வுலகில் நமது ஜீவனுள்ள போதே, தேவனுடைய வார்த்தைக்கு முறையாய் கீழ்படிந்து (குழுந்தையில் எடுத்த ஞானஸ்நானம் அல்ல, தேவ வார்த்தையை முறையாய் அறிந்து, அதை விசுவாசித்து, மனந்திரும்பி, பாவத்தை அல்ல விசுவாசத்தை அறிக்கையிட்டு (முழுகி) ஞானஸ்நானம் பெற்று சத்தியத்தில் வாழ்ந்து நித்திய வாழ்வை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் மற்றும் அவசரம் உள்ளது என்பதை அறியவேண்டும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக