சனி, 11 மார்ச், 2023

#1183 - இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து ஏறத்தாழ இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டது எனலாம். இந்த பூமியில் மக்களுக்காக ஏன் பிதாவோ அல்லது இயேசு கிறிஸ்துவோ இப்பூமியின் மனிதர்களுக்கான நம்பிக்கையூட்டும்படிக்கு யாருக்காவது நேரில் தோன்றினால் நன்றாக இருக்குமே?

#1183 - *இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து ஏறத்தாழ இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டது எனலாம். இந்த பூமியில் மக்களுக்காக ஏன் பிதாவோ அல்லது இயேசு கிறிஸ்துவோ இப்பூமியின் மனிதர்களுக்கான நம்பிக்கையூட்டும்படிக்கு யாருக்காவது நேரில் தோன்றினால் நன்றாக இருக்குமே?*

*பதில்* : பழைய ஏற்பாட்டின் கடைசி 2 வசனங்களில் “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்” என்று சொல்லி 400 வருடங்கள் இடைவெளி விட்டபோது சொல்லப்பட்ட எலியா பூமியில் கடந்து வந்தார். மத். 11:14; 17:11-10.

ஜனங்களுக்கு அவன், கர்த்தருடைய இராஜ்யம் வருகையை நெருங்கியுள்ளது என்றும் ஆகவே மனந்திரும்புங்கள் என்றும் வலிமையாய் போதித்தான். லூக்கா 3:5-6

தேவனாகிய கிறிஸ்து இவ்வுலகில் மாம்சத்தில் வந்து உலகமக்கள் அனைவருக்காகவும் பாவநிவாரண பலியானார். 1யோ. 2:2; 4:10

அவரை உண்மையாய் ஏற்றுக்கொண்டு அவரது கட்டளைக்கு கீழ்படிந்து அவரை பின்பற்றி கடைசி வரைக்கும் உத்தமமாய் வாழ்ந்தால் பரதீசிற்கும் அல்லது அவரது வருகை வரைக்கும் இப்பூமியில் உயிரோடுள்ளவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பிற்கு பின் பரலோகம் செல்வோம். 1கொரி. 15:51-52; 1தெச. 4:14-17

எந்த மனிதனும் எவ்வாறு பரலோகம் போகலாம் என்பதையும், இல்லையெனில் நரகம் நிச்சயம் என்பதையும் தெளிவாய் கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் நமக்கு விவரித்து சொல்லியதை பரிசுத்த ஆவியானவர் முழுமையாய் எழுதி வைத்துள்ளார். யோ. 20:31; யோ. 3:15-18; 2தீமோ. 3:16-17.

கிறிஸ்துவை விசுவாசியாதவன் மேல் தேவ கோபம் நிலைநிற்கும். கீழ்படியாதவர்கள் அழிவைக் காண்பது நிச்சயம். யோ. 3:36, மாற்கு 16:16

கண்களால் காணமுடியாவிட்டாலும் அதை உணர்கிறவர்கள் காற்று உண்டு என்று எவ்வாறு நம்புகிறார்களோ, அவ்வாறே கிறிஸ்து வருவதற்கு முன்னர் நமது உயிர் இவ்வுலகில் இருந்து வெளியேறும் போது பரதீசோ அல்லது பாதாளத்திற்கோ போய் அங்கு கிறிஸ்துவின் வருகை வரைக்கும் காத்திருப்பது உறுதி. யோ. 3:8; 3:11-21; லூக்கா 16:22-31

பழைய ஏற்பாட்டின் கடைசி 2 வசனத்தில் சொல்லப்பட்ட தெளிவான வாக்கியத்தை மறந்து அல்லது ஏற்க மறுத்து; கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்புக்கு முன்னர் (வருகைக்கு முன்னர்) இடையில் ஒரு முறை கிறிஸ்து இரகசியமாய் வந்து ஆட்சி செய்வார் என்று ஒரு பெருந்திரள் கூட்டம் கற்பனையாய் எழுதப்பட்ட “Left Behind” என்ற நாவல் கதையை வேதமாக நம்பிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு எழும்புவது நியாயம்.

ஆனால், கிறிஸ்து மீண்டும் இவ்வுலகிற்கு வரும்போது அந்த க்ஷனத்தில் தானே பூமியும் வானமும் அழிந்துவிடும் என்று வேதம் தெளிவாய் சொல்கிறது. 2பேதுரு 3:10

மனிதர்கள் கிறிஸ்துவின் வசனத்திற்கு கீழ்படிந்து நம்பிக்கையோடே தனது ஜீவனுள்ள வரை சத்தியத்திலே வாழ வேண்டும் என்பது தேவனுடைய பரம கட்டளையாய் இருக்கிறது. மாற்கு 13:13

இப்பூமியைக் கடந்து நிச்சயமாக நித்திய வாழ்க்கை ஒன்று உண்டு. அந்த வாழ்க்கையானது நித்திய நித்திய வேதனையா அல்லது சுக வாழ்வா என்பதை தீர்மானிக்க வேண்டியதும் அதை ஏற்பதும் நிராகரிப்பதும் மனிதனின் உரிமை.  எந்த மனிதனுக்கும் போதுமான அவகாசத்தை தேவன் தருகிறார். எவரும் தனக்கு நேரம் போதவில்லை என்று சொல்ல இயலாது. எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர் போதுமான அவகாசத்தை தருவதாலேயே கிறிஸ்துவின் வருகை தாமதமாகிறது. 1தீமோ. 2:4; 2பேதுரு 3:9; மத். 24:14

இதனிடையில் அவர் தன்னை தானே நிரூபிக்கும்படியாக ஒவ்வொரு முறையும் வந்து போகவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் – அவரைக் குறித்த சகல செய்திகளும், செயல்களும், ஆதாரங்களும், நிகழ்வுகளும், வருங்காரியங்களும் தெள்ளத் தெளிவாக வரலாற்று ரீதியாகவுமே திருஷ்டாந்தப்படுத்தியாகிவிட்டது. அவை யாவும் நமது கரங்களில் நமது சொந்த மொழியிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐசுவரியவான் கூட இதே கருத்தை முன்வைத்து ஆபிரகாமிடம் சொன்ன போது, விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாமின் பதில் இங்கே சாலப்பொருத்தமாய் பொருந்தும்:

லூக்கா 16:30-31 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

மேலும், தேவனுடைய வெளிப்பாடானது அனுதினமும் நம் மத்தியிலே தெளிவாய் உள்ளது என்று பவுல் ரோமாபுரியாருக்கு நினைவுப்படுத்துகிறார்.

“தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்” என்று. (ரோ. 1:19-23)

ஆகவே, நாம், இரகசிய வருகை என்றோ, பகிரங்கமான ஒரு ஆதாரமான விளம்பர விசிட் தேவை என்றோ நினைத்து தற்போதுள்ள வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடாமல் – சத்தியத்திற்கு கீழ்படிந்து நடப்போம். எந்த க்ஷனத்திலும் கிறிஸ்துவானவர் வருவார் என்பதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்போம்!!

வசனத்தைக் கேட்டு விசுவாசத்து மனந்திரும்பி (விசுவாசத்தை) அறிக்கையிட்டு பாவமன்னிப்பிற்கென்று (முழுகி) இன்னும் ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் உடனடியாக வசனத்திற்கு முறையாய் கீழ்படியவும்!
 
அவரவர் ஆத்துமாவிற்கும் அவரவர்களே உத்தரவாதி!!

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக