திங்கள், 27 ஏப்ரல், 2020

#908 - விருத்தசேதனம் என்றால் என்ன? விருத்தசேதனம் ஏன் நுனி தோலில் செய்யப்பட்டது?

#908 - *விருத்தசேதனம் என்றால் என்ன? விருத்தசேதனம் ஏன் நுனி தோலில் செய்யப்பட்டது?*

*பதில்*
இத்தனை நான் இந்த கேள்வி வராமல் இருந்தது ஆச்சரியமே !!

“மூல்” என்ற எபிரேய வார்த்தைக்கு – கூர்மையானதை மட்டப்படுத்துவது / குறைப்பது / நீளத்தை குறைப்பது என்ற அர்த்தம் கொண்ட வார்த்தையை ஆங்கிலத்தில் சர்கம்சிஷன் என்று மொழிபெயர்த்தார்கள். அதற்கு – “சுற்றி வெட்டுதல்” (சர்கம்+சிஷன்) என்று பொருள்.

தமிழாக்கம் செய்தவர்கள் “மூல்” என்ற எபிரேய வார்த்தையை அப்படியே மொழி பெயர்க்காமல் – “நோக்கத்தை உணர்ந்து வார்த்தையை அமைத்ததால் – “விருத்தசேதனம்” என்ற வார்த்தை உருவெடுத்தது என்று நினைக்கிறேன்.

*விருத்தசேதனம் என்பது என்ன*?
ஆண்குறியின் மேல்தோலின் முனைப்பகுதியை நீக்குவது (நுனித்தோலை மாத்திரம் வெட்டிவிடுவது) விருத்தசேதனம்.

இஸ்லாமியர்கள் தங்கள் கோட்பாடின் படி இன்றும் ஆண்பிள்ளைகளுக்கு செய்யும் பழக்கம் உள்ளது.

*விருத்தசேதனம் எப்போது தொடங்கியது*?
தேவன் ஆபிரகாமிடம் இதை துவக்கினார். வசனங்கள் கீழே:
எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம்பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். (ஆதியாகமம் 17: 10-14).

பணத்திற்கு கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை கவனத்தில் கொள்ளவும் !!

*அதன் நோக்கம் என்ன*?
இந்த செயல் – இஸ்ரவேலர்களுக்கும் தேவனுக்கும் இடையேயான உடன்படிக்கை.

பல ஆண்டுகளுக்கு பின்பதாக இப்படிபட்டதான உடன்படிக்கையின் அவசியத்தை தேவன் வெளிபடுத்தினார்.

லேவி. 26:40-42 அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி,  அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்த சேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால், நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன் என்றார்.

ஆகவே – “விருத்தசேதனம் இல்லாமை” என்பது – “கீழ்படியாமையை  அல்லது வணங்கா கழுத்துள்ள ஸ்திரமான பாவத்தை காண்பிக்கிறது.

வெளியரங்கமான செயலை விருத்தசேதனமானது காண்பித்தாலும், உண்மையில் இருதயத்தில் தேவனுடைய கட்டளையை கீழ்படிதலே அவசியம் என்பதை விளக்குகிறது.

நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள். உபா 10:16, 30:6

விருத்தசேதனமானது – தான் எப்போதும் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படியவேண்டும் என்பதை ஒருவனுக்கு நினைவுபடுத்துகிறதாயிருக்கிறது.

கீழ்படியாமையோ – விருத்தசேதனத்தை பிரயோஜனமில்லாதவையாக்கிவிடுகிறது (நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே. ரோ 2:25)

*நுனித்தோலில் செய்யவேண்டிய அவசியம் ஏன்*?
ஆபிரகாமிடம் உன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும் என்றார் தேவன். ஆதி. 12:3, ஆதி. 22:18

கிறிஸ்துவானவர் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரிசுத்த சந்ததியில் பிறக்க வேண்டியதாயிருந்தது. அதன்படி அவர் ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தார். கலா. 3:16

அந்த வாக்குத்தத்தம் நிறைவேற அவசியப்படும் அடையாளம் பாலினத்துடன் தொடர்புடையதாயிருந்தது.

*கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டுமா*?
விருத்தசேதனமானது, கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அது இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது. 

தேவனுடைய கட்டளைக்கு கீழ்படியும்படி கிறிஸ்தவர்களுக்கென்று ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. மத். 28:18-19

மேலும் வாக்குதத்தம் செய்யப்பட்ட சந்ததியில் கிறிஸ்து பிறந்துவிட்டார்.

மாம்சத்தில் வரவேண்டிய பரிசுத்த சந்ததி என்கிற கோட்பாடு முடிவுக்கு வந்தது !! 

உலகமனைத்தவரும் இப்போது விருத்தசேதனம் மூலம் அல்ல ஞானஸ்நானத்தின் மூலம் கிறிஸ்துவுக்குள் பாவமன்னிப்பு பெற்று பரிசுத்தமாக்கப்படுகின்றனர் (மத். 28:19)

கொலோ. 2:11-12 அல்லாமலும், நீங்கள் “கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே” மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள். ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

ஞானஸ்நானம் எடுப்பதோடு நின்று விடாமல் – அவர் சொன்னவற்றிக்கு கீழ்படிந்து நடக்க வேண்டியது அவசியாக இருக்கிறது (மத். 28:20)
 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக