ஞாயிறு, 16 நவம்பர், 2025

#1226 - கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா?

#1226 - *கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா?*

*பதில்* : வழக்கமாய் இந்தக் கேள்வி தொழுகை முடிந்து என்னிடம் கேட்கப்பட்டதால் இதை நமது பட்டியலில் ஒரு பதிவாய் எழுத சமயம் இல்லாமற்போனது.

சுருக்கமாய் பதிலை சொல்லவேண்டுமானால் – “ஆம், கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்புவை சேர்க்கலாம்.

ஏனெனில், உப்பு உடன்படிக்கையை பிரதிநிதிப்படுத்துகிறது. எண். 18:19, 2நாளா. 13:5
எபிரேயத்திலும் ஆங்கிலத்திலும் தெளிவாய் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம் தமிழில் காணவில்லை என்பது வருத்தம்.

எண். 18:19…… கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.

ஆங்கிலம்: …… it is a “*covenant of salt*” for ever before Jehovah unto thee and to thy seed with thee.

கர்த்தருடைய பந்தியின் அப்பத்தை எப்படி செய்யவேண்டும் என்ற செய்முறையை வேதம் நமக்கு குறிப்பிட்டு வழங்கவில்லை.

பஸ்காவின் வேளையில் அன்று வைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பத்தையே இயேசு கிறிஸ்து பயன்படுத்தினார். மத். 26:19-20

பஸ்காவின் நாட்களில் கர்த்தருடைய பந்தியை கிறிஸ்து துவக்கியதால் (மத். 26:26) அந்த பஸ்காவில் தயார் செய்யப்பட்ட அப்பத்தின் செய்முறையை காணமுடியும்.

யாத். 12:8 “அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்”.

அப்பமானது புளிப்பில்லாததாய் இருக்கவேண்டும் என்பது அவசியம்.

பாவமில்லாத வாழ்க்கைக்கு புளிப்பில்லாததை பவுல் ஒப்பிடுகிறார். 1கொரி. 5:6-7 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

பாவமில்லாத கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கும் அப்பம், புளிப்பில்லாத அப்பத்தால் பொருத்தமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

புளிப்பில்லாத அப்பத்தை செய்ய பலவிதமான செய்முறைகள் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டிருந்தும், புளிப்பும் தேன் மாத்திரமே விலக்கப்பட்டது என அறிகிறோம். லேவி. 2:11

எப்படியாயினும் அந்த அப்பத்தில் உப்பு கட்டாயம் சேர்க்கவேண்டும் என கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. லேவி. 2:13

முடிவாக,
கர்த்தருடைய பந்தியில் பயன்படுத்தப்படும் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா வேண்டாமா என எந்த நேரடி கட்டளையும் இல்லை. புளிபில்லாமல் இருப்பது அவசியம். ஆகவே கடையில் விற்கும் Bread பயன்படுத்த முடியாது.

அப்பத்தில் உப்பை உபயோகிப்பது தவறு என்று எவரும் சொல்வதற்கில்லை!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.comx
Print Friendly and PDF

திங்கள், 3 நவம்பர், 2025

#1225 - கடவுளுக்கும் மனுஷிக்கும் பிறந்த பிள்ளையா இயேசுகிறிஸ்து? இது தவறான கேள்வினா என்னை மன்னிச்சுடுங்க. பிறப்புக்குமுன்.... பிறப்பிக்கு பின் இயேசு கிறிஸ்துவை குறித்துக் கொஞ்சம் சொல்லுஙக

 #1225 - *கடவுளுக்கும் மனுஷிக்கும் பிறந்த பிள்ளையா இயேசுகிறிஸ்து? இது தவறான கேள்வினா என்னை மன்னிச்சுடுங்க.  பிறப்புக்குமுன்.... பிறப்பிக்கு பின் இயேசு கிறிஸ்துவை குறித்துக் கொஞ்சம் சொல்லுஙக*
 
*பதில்* :  ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதால் விந்துக்கள் இணைந்து கரு உருவாகியே மனிதர்களாகிய நாம் அனைவரும் பிறக்கிறோம் அல்லது நவீன விஞ்ஞான முறையில், ஆணின் விந்தை தனியே எடுத்து அதை பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கரு உருவாகிற முறையிலும் குழந்தை உருவாகுகிறது. எப்படியாயினும் குழந்தை உருவாக ஒரு ஆணிண் விந்து அவசியம்.
 
இந்துக்களின் புராணங்களில் (கதைகளில்) வருவது போல கடவுள் மனுஷியுடன் உறவு கொள்வதில்லை.
 
இயேசு கிறிஸ்துவோ - 
ஆணின் துணையினாலோ அல்லது 
ஆணிண் விந்துவின் மூலமாகவோ பிறக்கவில்லை. 
 
ஏசா. 7:14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு “கன்னிகை கர்ப்பவதியாகி” ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
 
கலா. 4:5 காலம் நிறைவேறினபோது, “ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும்” (மூல பாஷையில் – ஸ்திரீயின் வழியில் பிறந்தவர்  / made of women) நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
 
யோ. 1:13 - 14 அவர்கள், “இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல்”, தேவனாலே பிறந்தவர்கள். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
 
ஒரு மனிதன் எவ்வாறு பிறக்கிறானோ அதே வகையில்
பெண்ணின் வயிற்றில் கர்ப்பப்பையின் வழியே குழந்தையாக தேவன் மாம்ச வடிவில் பிறந்தார். 
 
1யோ. 4:2  தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: “மாம்சத்தில் வந்த” இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
 
1யோ. 4:3  “மாம்சத்தில் வந்த” இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
 
2யோ. 1:7  “மாம்சத்தில் வந்த” இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
 
ரோ. 1:5  “மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்”, பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட “தேவகுமாரனுமாயிருக்கிறார்”.
 
1தீமோ. 3:16  அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. “தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்”, ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
 
இப்படியாக இன்னும் ஏராளமான வசனங்களை எடுத்துக்காண்பிக்கலாம். இதுவே போதுமானது என்று நம்புகிறேன்.
 
பெண்ணின் வித்து (Seed / zera in Hebrew) என்று ஆதியாகமம் 3:15ல் வாக்களிக்கப்பட்டது. 
 
ஏனெனில் – 
பாவத்தில் விழுந்த ஆதாமின் மூலமாக 
வந்த எந்த மனிதனும் பாவத்தினுள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டதால், 
உலகத்தின் பாவத்தை தீர்க்க பாவமில்லாதவராக இயேசு வந்தார்.
 
எபி. 4:15  நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
 
*இந்நாட்களில் அநேகர் தங்களை கிறிஸ்துவின் சபையார் என்று மார்தட்டிக்கொண்டு, கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று ஏற்காமல், அவர் தேவன் அல்ல என்று வாதிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதிகள்*
. வீட்டினுள்ளேயே நுழையவிடக்கூடாதென யோவான் அப்போஸ்தலன் சொல்லியிருப்பதன் அவசியத்தை நாம் உணரவேண்டும். 2யோ. 1:10-11 
 
மாம்சத்தில் வந்த இயேசுவைக் *கர்த்தர் என்றும் கிறிஸ்து என்றும் ஏற்காதவனே அந்திக்கிறிஸ்து* என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 
 
1யோ. 2:22  இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
 
1யோ. 4:3  மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
 
2யோ. 1:7  மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
 
2)
*இயேசு கிறிஸ்து - இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்பும் இருக்கிறவர்*
சிலுவைக்கு பின்பும் இருக்கிறவர். வெளி. 1:8, 11, 21:6, 22:13 
 
எப்போதும் அவர் வார்த்தையானவர். யோ. 1:1, 14, 1யோ. 1:1-2, 5:7, வெளி. 19:13
 
எப்போதும் அவர் தேவன்.  யோ. 10:30-33, 20:28; சங். 45:6; ஏசா. 7:14, 9:6, 40:9-11; மத். 1:23; ரோ.  9:5; பிலி. 2:6; 1தீமோ. 3:16; தீத்து 2:13; எபி. 1:8-13; 2பேதுரு 1:1, 1யோ. 5:7, 5:20
 
மனித குலத்திற்குள் பாவ மன்னிப்பின் வழியாய் ஒரு மீட்பராய் வந்ததன் நிமித்தம் அவர் தேவகுமாரன் என்றழைக்கப்படுகிறார். ரோ. 1:5
 
இந்த உலகத்திற்குள் மாம்சத்திலே வந்து சிலுவையில் மரணத்தை வெற்றிச்சிறந்ததால் – அவருக்கு: 
ஆண்டவர் – அப். 2:36
கர்த்தர் – பிலி. 2:11
மேசியா (கிரேக்க வார்த்தை) / இரட்சகர் / மீட்பர் (தமிழ் வார்த்தை) / கிறிஸ்து (எபிரேய வார்த்தை) – அப். 2:36, 4:11-12, 5:30-31, 10:36-42; சங். 2:1-8; மத். 28:18-20; யோ. 3:35-36, யோ. 5:22-29; ரோ. 14:8-12; 2கொரி. 5:10; 2தெச. 1:7-10
பிரதான ஆசாரியன் – எபி. 9:11-15
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் – எபி. 9:15
மூத்த சகோதரன் - ரோ. 8:29
அப்போஸ்தலன் -  எபி. 3:1
என்ற பெயர்களும் கொடுக்கப்பட்டது. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

புதன், 29 அக்டோபர், 2025

#1224 - நூற்றுக்கு அதிபதி இயேசுவை நேரடியாக பார்த்தார் என மத்தேயு 8:5லும், லூக்கா.7:3ல் மூப்பரை அனுப்பினார் என்றும் உள்ளதே… இதை எப்படி புரிந்துக்கொள்வது?

 #1224 - *நூற்றுக்கு அதிபதி இயேசுவை நேரடியாக பார்த்தார் என மத்தேயு 8:5லும், லூக்கா.7:3ல் மூப்பரை அனுப்பினார் என்றும் உள்ளதே… இதை எப்படி புரிந்துக்கொள்வது?*
 
*பதில்* : இது ஒரு முரண்பாடு போல தோன்றலாம். ஆனால், சம்பவத்தின் பார்வை மற்றும் பாணியில் உள்ள வேறுபாட்டை கவனிக்கவும்:
 
மத்தேயு மற்றும் லூக்கா இருவரும் ஒரே சம்பவத்தை விவரித்தாலும், அவர்கள் கவனம் வேறுபடுகிறது:
 
மத்தேயு சொல்லும்போது சுருக்கமாகவும் நேரடியாகவும் எழுதுகிறார். இது இயேசுவின் அதிகாரம் மற்றும் நேரடி தொடர்பு என்பதைக் காட்டும்.
 
லூக்கா சமூக விவரங்களில் அதிக கவனம் செலுத்தி, விபரமாய் எழுதுகிறேன் என்று தனது கடிதத்தை  துவங்கினாரே ! (லூக்கா 1:3-4)
 
ஆகவே, இருவருக்கு இடைப்பட்டதான மனிதர்கள் (யூத மூப்பர்கள்), பின்னர் நூற்றுக்கு அதிபதியின் நண்பர்கள் ஆகியோரை குறிப்பிடுகிறார். இதன் மூலம் கலாச்சார மற்றும் உறவுப் பின்புலத்தை வெளிப்படுத்துகிறார்.
 
அதாவது:
மத்தேயு அந்த நிகழ்வை நூற்றுக்கு அதிபதி நேரடியாக செய்தது போல சுருக்கமாக எழுதுகிறார், ஆனால் லூக்கா அவர் யூதர்களின் மூப்பர்கள் வழியே செயல்பட்டதை விளக்குகிறார்.
 
இவ்வாறு எழுதப்படுவது ஒரு பழமையான வழக்கமான சொற்தொடர். 
 
உதாரணங்கள்:
யோவான் 4:1-3அங்கே இயேசு ஞானஸ்நானம் கொடுத்தார் என கூறினாலும், அதனைத் தொடர்ந்து அவர் தாமே அல்ல, அவருடைய சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்ததாய் விளக்குகிறது.
 
யாத்திராகமம் புத்தகத்தில் - மோசே, பார்வோனோடு ஆரோன் மூலம் பேசுகிறார்; ஆனாலும் வேதாகமம் “மோசே பேசினார்” என்று கூறுகிறது.
 
ஆகவே, மத்தேயுவின் விவரம் லூக்காவை மறுப்பதல்ல. 
 
ஒவ்வொரு நற்செய்தியாசிரியரும் தங்களின் முக்கிய செய்திக்கேற்ப எழுத்து வகையை அமைத்துள்ளனர்.
 
மத்தேயு – புறஜாதியானான நூற்றுக்கு அதிபதியின் நம்பிக்கை மீது கவனம் செலுத்துகிறார். அதாவது யூதரல்லாதவரும் இயேசுவின் அதிகாரத்தை ஏற்கிறார்கள் என்பதை காட்டுகிறார். இதை தனிப்பட்ட சந்திப்பு போல சுருக்கமாக எழுதுகிறார்.
 
லூக்கா - அந்த நூற்றுக்கு அதிபதியின் தாழ்மை மற்றும் தகுதியற்ற தன்மை பற்றி கவனம் செலுத்துகிறார். அவர், தான், இயேசுவை நேரில் சந்திக்கத் தகுதியற்றவனாக எண்ணியதையும் (லூக்கா 7:6) அதனிமித்தம் யூதர்களின் மூப்பர்களின் மூலம் நடந்ததாகவும் விவரிக்கிறார். 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

திங்கள், 20 அக்டோபர், 2025

#1223 - மிக தெளிவாக இயேசு கிறிஸ்துவை தேவன் என்று நான் நம்புகிறேன். ஆனால் தன்னை ஆராதனை செய்ய அவர் கட்டளை கொடுக்கவில்லையே

 #1223 - *மிக தெளிவாக இயேசு கிறிஸ்துவை தேவன் என்று நான் நம்புகிறேன். ஆனால் தன்னை ஆராதனை செய்ய அவர் கட்டளை கொடுக்கவில்லையே*
 
*பதில்* : கிறிஸ்து – பிதாவாகிய தேவனுடைய மகிமையின் வெளிப்பாடு
 
கிறிஸ்து எல்லாவற்றிற்கும் உரிமையாளராக நியமிக்கப்பட்டார்
 
பிதாவினுடைய எல்லாவற்றும் கிறிஸ்துவுக்கே உடையவை – யோவான் 16:15

 
ஜாதிகள் (தேசங்கள்) அவருக்குச் சுதந்தரமாக அளிக்கப்பட்டன – சங்கீதம் 2:8

 
எல்லாம் அவருடைய ஆட்சிக்குள் ஒன்றிணைக்கப்பட்டன – எபேசியர் 1:10

 
விசுவாசிகள் அவருடைய சுதந்தரமாயிருக்கிறார்கள் – எபேசியர் 1:18
 
கவனித்து புரிந்துக்கொள்ளவேண்டியது என்னவெனில், 
நாம் கிறிஸ்துவோடு கூட்டு வாரிசுகளாயிருக்கிறோம் – ரோமர் 8:16-17
கிறிஸ்துவே நம்மைத் தம் சகோதரர் என அழைப்பதற்கு மகிழ்கிறார் – எபிரெயர் 2:11
எவ்வளவு மகத்துவமானவர் நம் மூத்த சகோதரர்!
 
கிறிஸ்துவே உலகங்களை உருவாக்கினார்.
அவர் எல்லாவற்றையும் படைத்தார் – கொலோசெயர் 1:16

தேவன் இயேசுவினாலே எல்லாவற்றையும் படைத்தார் – யோவான் 1:3,10

அவர் தம் படைப்பைக் கடந்தும் நிலைத்திருப்பார் – எபிரெயர் 1:10–12

அவருடைய கைவினையின் மகத்துவத்தை நோக்குங்கள்!
 
இந்தப் பிரபஞ்சத்தின் பெருமையையும் ஒரு அணுவின் நுண்ணிய தன்மையையும் அளக்க முடியாது; ஆனாலும் இவை அனைத்தையும் ஒரே கரம் உருவாக்கியது. சங்கீதம் 148
 
கிறிஸ்து தம் வார்த்தையினால் உலகைத் தாங்குகிறார்
அனைத்தும் அவரினால் நிலைத்திருக்கின்றன – கொலோசெயர் 1:17

அவரே தம் வார்த்தையினாலே உலகை உண்டாக்கினார் – சங்கீதம் 33:6–9
 
இயேசுவே அந்த “வார்த்தை” ஆவார் – யோவான் 1:1
படைப்பில், “தேவன் *சொல்ல*, அது ஆயிற்று” – ஆதியாகமம் 1
 
உலகம் எதிலுமில்லாத நிலையிலிருந்து உருவாக்கப்பட்டது – எபிரெயர் 11:3

அதே “வார்த்தையினாலே” இன்றும் உலகம் நிலைத்திருக்கிறது – 2 பேதுரு 3:5–7
 
கிறிஸ்துவே தேவனுடைய மகிமையை முற்றிலும் வெளிப்படுத்துகிறார்
தேவன் ஒரு சூரியனாக இருக்கிறார் – சங்கீதம் 84:11
நாம் சூரியனை நோக்கும்போது அதன் ஒளியையே காண்கிறோம்; அதன் உட்பகுதியை காண இயலாது; அதன் மகிமையை நேரடியாகப் பார்க்க நம்மால் முடியாது.
 
ஒருவரும் பிதாவைக் காணவில்லை – யோவான் 1:18
 
இயேசுவே பிதாவை நமக்குக் காட்டியுள்ளார் – யோவான் 1:18
இயேசுவின் மகிமையே தேவனுடைய மகிமை – யோவான் 1:14
இயேசுவில் தேவத்வத்தின் பரிபூரணத்தையும் உடலுற வெளிப்படுவதைப் பார்க்கலாம் – கொலோ. 2:9
 
கிறிஸ்துவே தேவனுடைய இருப்பின் சரியான உருவம்
அவர் காணப்படாத தேவனுடைய உருவம் – கொலோசெயர் 1:15

 
உலகுக்கு பிதாவை வெளிப்படுத்த தகுதியானவர்
உலகம் உண்டாகும்முன் பிதாவோடு மகிமையுடையவர் – யோவான் 17:5
அவர் தேவனோடும் இருந்தார்; அவரே தேவனாயிருந்தார் – யோவான் 1:1
தேவனாகியவர், பிதாவோடு தேவனுடைய ரூபத்திலும் இருந்தார் – பிலிப்பியர் 2:6
 
கிறிஸ்து நம்முடைய பாவங்களை நீக்கினார்
தம் இரத்தத்தினாலே நம்மைச் சுத்தமாக்கினார் – எபிரெயர் 9:14

அவர் நம்மை எல்லா பாவத்திலிருந்தும் சுத்தமாக்குகிறார் – 1 யோவான் 1:7

அவர் நம்மை மீட்டார்; பேரிலைக்கு நம்மை வாங்கிக்கொண்டார் – எபேசியர் 1:7; 1 பேதுரு 1:18–19
 
கிறிஸ்து பரலோகத்தில் தேவனுடைய வலதுபுறத்தில் இருக்கிறார்
அவர் இப்போது மகிமையின் நிலைப்பாட்டிலிருந்து ஆட்சி செய்கிறார் – எபேசியர் 1:20; 1 பேதுரு 3:22

நிச்சயமாக அவர் நம் வணக்கத்திற்கும் மகிமைக்கும் தகுதியானவர் – பிலிப்பியர் 2:9–11

தானியேல் அவர் மகிமையை முன்னரே கண்டார் – தானியேல் 7:13–14

யோவான் அவருக்குக் கொடுக்கப்பட்ட வல்லமையையும், செல்வத்தையும், மகிமையையும், மானத்தையும் கண்டார் – வெளிப்பாடு 5
 
கிறிஸ்து நாம் கொடுக்கக்கூடிய எல்லாவற்றிற்கும் தகுதியானவர்
இத்தனை இருந்தும் உங்கள் ஸ்தோத்திரத்தையும் மரியாதையையும் அவருக்குக் கொடுக்க தடுப்பது இருதயக்கடினமல்லவா?
உங்கள் சுய விருப்பத்தை வளைத்து, ராஜாதி ராஜனுக்குத் தங்களை ஜீவ பலியாய்க் கொடுக்கமாட்டீர்களா?
 
மேலே எழுதப்பட்ட வார்த்தைகள் – வேத அறிஞர் ஜெஃப்ரி ஹாமில்டன் கட்டுரையிலிருந்து எடுத்தவை.
 
மேலும், நேரடியான தொடர்பு இந்த கேள்வியிலும் அடங்கியிருப்பதால், எனது பதில் எண் #1166ஐயும் இத்துடன் தொடர்ந்து இணைக்கிறேன்.

தேவத்துவத்தில் மூவர் இருக்கின்றனர். எண்ணிக்கையில் மூவர் எண்ணத்தில் ஒன்றாய் உள்ளனர்.

இந்த தலைப்பைக் குறித்து முழுமையாய் அறிய நமது பதில் எண் #431ல் காணலாம்.

முதன்மையாகவும் பிரதானமாகவும் தொழுகையானது பிதாவிற்குறியது. மத். 4:10

நாம் பிதாவையே தொழுதுக்கொள்கிறோம். கிறிஸ்துவின் மூலமாக தொழுகிறோம்.

கிறிஸ்துவிற்கு பிதாவானவர் தலையாய் இருக்கிறார் என்று 1கொரி. 11:3 சொல்கிறது.

என்னிலும் என் பிதா பெரியவர் என்று கிறிஸ்து சொல்லியிருக்கிறார். யோ. 14:28

பிதா சொல்லியதையே தான் சொல்வதாகவும், தான் சொல்லியதையே பரிசுத்த ஆவியானவரும் சொல்வார் என்றும் கிறிஸ்து சொல்கிறார். யோ. 16:13-15

அப்படியானால் கிறிஸ்து தொழுகைக்குறியவரல்ல என்றர்த்தம் அல்ல.

அவர் தேவத்துவத்தில் ஒருவர். தொழுகைக்கு பாத்திரரானவரே.

தன்னை தொழுதுக்கொண்டவர்களை கிறிஸ்து தடுக்கவில்லை என்கிற சில வசனங்களை கீழே குறிப்பிடுகிறேன்:

1-குஷ்டரோகி அவரை  பணிந்துக்கொண்டபோது – மத். 8:2

2-ஜெபஆலயத் தலைவன் அவரை பணிந்துக்கொண்டபோது – மத். 9:18

3-சீஷர்கள் அவரை பணிந்துக்கொண்டபோது- மத். 14:33

4-கானானிய பெண்மனி அவரை பணிந்துக்கொண்டபோது – மத். 15:25

5-கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னரும் அவரது சீஷர்கள்  அவரை பணிந்துக்கொண்டபோது – மத். 28:9: 18-19

6-தோமா இயேசுவை தேவனே என்றழைக்கிறார். அதை கிறிஸ்துவும் ஆமோதிக்கிறார். யோ. 20:28-29

தேவதூதர்கள் இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளவேண்டும் என்று கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. எபி. 1:6

குறிப்பு: ப்ரொஸ்க்யூனியோ என்ற கிரேக்க வார்த்தைக்கு தொழுதுக்கொள்ளுதல் என்று பொருள். அந்த வார்த்தையை தான் பணிந்து கொண்டார்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் தெளிவாக worship என்றுள்ளது.

பிதாவாகிய தேவன், இயேசு கிறிஸ்துவை தேவன் என்றழைப்பதை எபி. 1:8-9ல் காணலாம்.

அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடும்படி கட்டளை கொடுக்கப்பட்டதே!! இம்மானுவேல் என்றால் – தேவன் நம்முடன் இருக்கிறார் என்றல்லவா அர்த்தம்! மத். 1:23

அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். யோவான். 5:22:23

 குமாரனை கனம் பண்ணாதவன் பிதாவையும் கனம் செய்வதில்லை என்பதை குறிப்பாய் கவனிக்கவும்

பின்மாறினவர்கள் தங்களது நிலைமையை உணர்ந்து மனந்திரும்புவது எளிது. ஆனால் வஞ்சிக்கப்பட்டவர்களது மனந்திரும்புதலோ மிகவும் கடினம் என்று வேதம் தெளிவாய் சொல்கிறது.

தெள்ளத்தெளிவாக வசனங்கள் இருந்தும்; கிறிஸ்துவை தேவன் அல்லவென்றும் அவர் வெறும் தேவ குமாரன் தான் என்றும் வாதாடுபவர்கள் தங்களது எண்ணங்களை மேலோக்கி அதையே பற்றிக்கொண்டு உண்மையை அறிந்து கொள்ள மறுத்து தேவ வசனத்தையே ஏற்க மனமில்லாதவர்கள்.

யோவான் சுவிசேஷத்தின் துவக்கமே “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” என்று 1:1-3ல் காண்கிறோம்.

நன்கு கவனிக்கவும் “அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்று வேதம் சொல்கிறது.  தேவனிடத்திலிருந்தது என்றால் அங்கு பன்மையை பார்க்கிறோ. எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டிருப்பதை கவனிக்கவும்.

மேலும், யோவானில் தொடர்ந்து நாம் 10ம் வசனத்தை வாசித்தால், "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை என்றும் 14ம் வசனத்தில் “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்று தெளிவாய் உள்ளது. அந்த வார்த்தை எனப்படுபவர் இயேசு கிறிஸ்து.

ரோமர் 9:5ம் வசனத்தில் “பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்” என்றுள்ளது.

ரோமர் 10:12ல்…தம்மைத் தொழுதுக்கொள்கிற யாவருக்கும் கர்த்தரானவர் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார் என்றுள்ளது.

1தீமோ. 3:16ல் “தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்” என்றுள்ளது.

1யோ. 5:20 … இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார் என்று அப்போஸ்தலர்களிலேயே வயதில் முதிர்ந்த யோவான் எழுதுகிறார்.

அப். 20:28…தேவன் தமது சுயரத்தினாலே சம்பாதித்த சபை என்றுள்ளது.

மேலும், இயேசு கிறிஸ்து இயற்கைக்கு அப்பாற்பட்டு சகல அற்புதங்களையும் செய்து தனது தெய்வீகத்தை வெளிப்படுத்தினார்.

அழுகிப்போன சரீரத்தை உயிருடன் எழுப்பினார்.

1- காற்றும் கடலும் இவரது வார்த்தைக்கு கீழ்படிந்தன.

2- 5அப்பங்களும் 2மீன்களும் மாத்திரம் இருந்த போதும் புருஷர்கள், ஸ்திரீகள், 3- பிள்ளைகள் என்ற கணக்கில் குறைந்தபட்சம் 15,000 பேருக்கு ஆகாரத்தை கொடுத்தார்.

3- சரீரம் கெட்டு சீழ்பிடித்து இருந்தபோதும் தீராவியாதியாயிருந்த அநேகங் குஷ்டரோகிகளை குணமாக்கினார்.

4-பிறவி குருடருக்கு பார்வையளித்தார்.

5-பிறவி சப்பானிகளுக்கு சுகமளித்தார்.

இப்படி இன்னும் பல பல அற்புதங்களை அவர் செய்தார்.
 
நாட்டிற்கு உண்மையான இராஜா ஜனங்களிடத்தில் வந்து நான் தான் இராஜா என்று தன்னை பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை!

இவ்வளவு தெளிவான வசனங்களை காண்பித்த பின்னரும்;
இயேசு தேவ குமாரன் மாத்திரமே, அவரை தேவன் என்று சொல்லக்கூடாது தொழுது கொள்ள அவர் பாத்திரமானவர் அல்ல என்பவர்களது மனக்கண்களை தேவன் திறக்கும்படி நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.

வாரந்தோறும் கிறிஸ்துவின் மரணத்தை நினைவில் கொள்ளும் கர்த்தருடைய பந்தி – தொழுகையில் ஒரு பகுதியாயிற்றே. தொழுகை என்ற உணர்வு இல்லாமல், கர்த்தருடைய பந்தியில் கலந்துக்கொள்ளமுடியுமோ? 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF