ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

#1210 - நான் எந்த ஒரு தவறான செயலும் யாருக்கும் செய்யவில்லை. நான் மரணித்தால் பரலோகம் போவேன் பின்னர் எதற்கு இந்த கிறித்தவ சமயம் என்று கேட்கிறார்?

#1210 - *இஸ்லாமிய நண்பர் ஒருவர் கூறுகிறார் நான் அல்லாஹ்வை வணங்குகிறேன். நான் எந்த ஒரு தவறான செயலும்  யாருக்கும் செய்யவில்லை.  ஒருவேளை நான் மரணித்தால் பரலோகம் போவேன் பின்னர் எனக்கு எதற்கு இந்த கிறித்தவ சமயம் என்று கேட்கிறார்*. அவருக்கு நான் எப்படி விளக்கம் சொல்வது?

*பதில்* : நாம் எவருடைய மதத்தையும் குறைகூற அதிகாரமில்லை. அவரவரது நம்பிக்கையை அவரவரே சோதித்துக்கொள்வது அவசியம். 

பாதை எது என்று சொல்வது நம் கடமை. அந்த பாதையை தேர்ந்தெடுப்பதும் மாற்று பாதையை பின்பற்றுவதும் அவர்கள் உரிமை. இயேசுகிறிஸ்துவும் தனது போதனையை தெளிவாய் பிரசங்கித்தார். காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று தெரிவித்தார். மத். 11:15

இவ்வுலகத்தில் பிறந்து நன்மை தீமை அறிய துவங்கிய நாள் துவங்கி இன்று வரை (அல்லது தனது சாவு வரை) ஜீவித்த எவரும் தான் தவறே செய்யவில்லை என்று சொல்வதற்கில்லை. அப்படி சொல்பவர் எவரும் குற்றவாளி அல்லது பொய்யரே என்று வேதம் தெளிவாய் சொல்கிறது. ரோ. 3:23; பிர. 7:20; 1யோ. 1:8-10

மேலும், வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும் கொடுத்தாலும், ஒரே ஒரு சதுரடி நிலத்தைக்கூட பரலோகத்தில் நமக்கென்று ஒதுக்கீடோ முன்பதிவோ செய்துக் கொள்ள முடியாது !!

அதாவது, பூமியில் நீங்கள் எவ்வளவு நல்லவராய் இருந்தாலும், அது பரலோகத்தில் விலைபோகாது !!

உங்களை நான் முன்னமே அறிந்திருந்தால் மாத்திரமே, எப்படி உங்கள் வீட்டினுள் நான் பிரவேசிக்கமுடியுமோ, பரலோகத்திற்கு சொந்தமானவரை நான் அறிந்திராத பட்சத்தில் உள்ளே நமக்கு செல்ல அனுமதியில்லை!

மேலே என்ன இருக்கிறது என்று கீழே உள்ளவருக்கு எப்படித்தெரியும்? மேலேயிருந்து யாரேனும் ஒருவர் கீழே வந்தவர் மாத்திரமே அதை நமக்கு வெளிப்படுத்தமுடியுமேயன்றி, பூமிக்குள் கடந்து சென்றவர் எவரும் அதை நிரூபிக்க முடியாது. 

இயேசு கிறிஸ்து, மேலிருந்து வந்தவர். மரியாள் வயிற்றில், ஆணின் துனையின்றி பிறந்தவர். மரணம் அவரை பூமிக்குள் அடைத்துப்போடமுடியவில்லை. 3ம் நாள் உயிர்த்தெழுந்தார். அதன் பின்னர் பூமியில் 40 நாட்கள் வாழ்ந்தார், பின்பு அநேகர் கண்கள் கண்டுக்கொண்டிருக்க – அவர் பரலோகம் ஏறினார். இது சரித்திரம். இப்படி எவருமே இன்று வரை நிரூபிக்கவும் இல்லை, இனி அப்படி நடக்கவும் நடக்காது! 

ஆதார வசனங்கள்: எபே. 4:9; நீதி. 30:4; யோ. 3:13; 6:33; 6:62; 20:17; அப். 2:34-36

பரலோகத்தின் சொந்தக்காரர் இயேசு கிறிஸ்து. யோ. 14:2; எபி. 11:10; வெளி. 3:21

அவரை நாம் அண்டிக்கொண்டு, அவருடைய சரீரத்தில் பங்காளனாகும்பொழுது, நமக்கு அந்த உரிமை தரப்படுகிறது. அப். 2:47, கொலோ. 1:18; ரோ. 12:5
 
அவரை நாம் அண்டிக்கொள்ள நமது சுயக் கிரியைகள் உதவாது. அவருடைய கட்டளைக்கு கீழ்படிந்து அவரது சொல்லின்படி நாம் செயல்பட்டால் மாத்திரமே, நாம் அவருடையவர்களாகிறோம். 1தீமோ. 4:8

ஆகவே, சுய முயற்சியினால் அல்ல, மேலான அந்த பரலோகம் செல்லும் பாக்கியத்தை நாம் கிருபையால் மாத்திரமே பெற்றுக்கொள்கிறோம். சொந்த கிரியையினால் அல்லது இரட்சிப்பற்ற வெறும் நற்கிரியைகளினால் அல்ல. யோ. 14:3, 1பேதுரு 1:13-16, தீத்து 3:5-6, எபே. 2:5
 
ஆகவே, பரிசுத்தம் என்று நினைத்துக்கொண்டு சொந்தக் கிரியையை செயல்படுத்தாமல், சுயச்சிந்தனையிலிருந்து வெளியேறி கர்த்தருக்கு கீழ்படிந்து, பயந்து, சத்தியத்தின்படி நடந்தால் மாத்திரமே சொர்க்கம் கிட்ட வாய்ப்புள்ளது. சொந்த புத்தியால் நிர்வாணமே மிஞ்சும் !!

2 தீமோ. 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

ரோ. 11:6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால் கிரியையானது கிரியையல்லவே.

இயேசு கிறிஸ்து வரும்போது இந்த பூமியே அழிந்து விடும் என்று வேதம் சொல்லியிருக்க இவ்வுலகில் எங்கு எதை செய்தாலும் அது நமது வாழ்வின் சுகத்திற்கேயன்றி வேறெதற்கும் உதவாது. 2பேதுரு 3:10

நமது பாவம் மன்னிக்கப்படுவதற்காக செய்ய வேண்டிய காரியத்தை வேதம் நமக்கு தெளிவான பதிலை கொடுத்திருக்கிறது.

*செய்யவேண்டியதாவது:*
1-கிறிஸ்துவின் போதனையை கேட்டு
2-விசுவாசித்து
3-பாவத்தை விட்டு மனந்திரும்பி
4-கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று உங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு
5-பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஆதார வசனங்கள்: மாற்கு 16:16, அப். 2:37-38, அப். 22:16, ரோ. 6:1-6

முடிவு பரியந்தம் இந்த விசுவாசத்தில் நிலைத்திருந்தால் அப்போது கிறிஸ்துவின் வருகையில் நாம் ஒன்றாக பரலோகத்தில் ஒருவரை ஒருவர் காணமுடியும்.


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
 
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group):*

*எங்களது வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

புதன், 15 ஜனவரி, 2025

மனந்திரும்புதலற்ற ஞானஸ்நானம்!

 *மனந்திரும்புதலற்ற ஞானஸ்நானம்!*

இரட்சிக்கப்படுகிறவர்களை சபையில் சேர்க்கும் கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகள்.

யூதேயா மற்றும் எருசலேம் நகரத்தார், தங்கள் *பாவங்களை அறிக்கையிட்டு* யோவானிடம் சென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். மத். 3:5-6; மாற்கு 1:5

எல்லா நீதியையும் *நிறைவேற்ற* சுமார் 30வது வயதில் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்தார். மத். 3:15, லூக். 3:23

*விசுவாசித்து, தனது பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி*, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, பாவமன்னிப்பிற்கென பவுல் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். அப். 22:14-16 

*விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம்* பெற்றவன் இரட்சிக்கப்படுவான் என்று மாற்கு மூலம் பரிசுத்த ஆவியானவர் எழுதி வைத்துள்ளார். மாற்கு 16:16

சத்தியத்திற்கு கீழ்படிந்து ஞானஸ்நானம் எடுப்பவர்கள், *பாவத்திற்கு மரித்ததால்* கிறிஸ்துவினுடைய மரணத்திற்கும் அடக்கத்திற்கும் உட்படுகின்றனர் என்று பவுல் மூலமாய் பரிசுத்த ஆவியானர் எழுதினார். ரோ. 6:1-4

தனது *தவறை உணர்ந்த* சிறைச்சாலை அதிகாரி இரவு என்று கூட பாராமல் உடனடியாய் மனம் மாறினார், கட்டளைக்கு கீழ்படிந்தார், அப்பொழுது தானே ஞானஸ்நானமும் பெற்றுக்கொண்டார். அப். 16:33

ஜலத்தினால் மாத்திரமல்ல, ஆவியினாலும் பிறக்கவேண்டியது அவசியம் என்று இயேசு கிறிஸ்து தெளிவுப்படுத்தினார். யோ. 3:5

சுவிசேஷ வார்த்தையை ஏற்றுக்கொண்டவர்கள், *தங்கள் செயல்பாட்டை உணர்ந்து, மனந்திரும்பி, மனஸ்தாபப்பட்டு* உடனடியாய் கட்டளைக்குக் கீழ்படிந்து தங்களது பாவங்கள் மன்னிக்கப்படும்படி ஞானஸ்நானம் பெற்றனர். அப். 2:36-41

ஏதோ எல்லாரும் எடுக்கிறார்களே, நாமும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று, *மனந்திரும்பாமலே ஞானஸ்நானம்* பெற வந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை விஷப்பாம்புகள் என்று யோவான் கண்டித்தார். மத். 3:7-8

முண்டியடித்து ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டதால், அன்று வரை “ஐயோ அம்மா” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களது புதிய மாற்றமாக, உட்கார்ந்தாலும் எழுந்தாலும், “ஆண்டவரே, கர்த்தாவே” என்று வாயால் சதா உச்சரிக்கத் துவங்கி தமக்கு தாமே கிறிஸ்தவன் என்று மெச்சிக்கொண்டாலும், கிறிஸ்தவர் என்று ஊரே அங்கீகரித்தாலும்... *முறையான மனந்திரும்புதல்* இல்லையெனில் அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வீட்டு வாசலைக்கூட கடக்க முடியாது என வசனம் அவர்களை அங்கீகரிக்கவே மறுக்கிறது. மத். 7:21 

இப்படி எந்த வகையிலும் உட்பட வாய்ப்பில்லாத பிஞ்சு குழந்தைக்கு ஞானஸ்நானம் என்ற பெயரில் வேதம் அறியாதவர்கள் கொடுக்கும் பொழுது - வசனத்தை எடுத்துச்சொல்லி தவறு என்று போதிக்க இப்பொழுது பலர் அறிந்துள்ளனர். 

சொல்வதில் அல்ல செயலிலும் மாற்றம் வேண்டும் என்பதை மறந்துபோகக்கூடாது !! யாக். 1:22; ஓசியா 8:2-3; ரோ. 2:13; லூக்கா 6:46; 13:25;  தீத்து 1:16; யாக். 2:20-26

எப்படியாயினும் தங்களுக்குப் படி அளக்கும் எஜமானர்களைக் குஷிப்படுத்திவிடவேண்டும் என்ற முனைப்பிலோ என்னவோ தெரியவில்லை... “இவருக்கு ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறோம் - ஜெபித்துக்கொள்ளுங்கள்” என்று தாங்கள் ஞானஸ்நானம் கொடுத்தவர்களுடன் நின்று எடுத்துக்கொண்ட சிலரது புகைப்படங்களில்; அவர்களது *மதத்தைக் குறிக்கும் குறியீடு நெற்றியில் அப்படியே இருந்த பொழுதும்* அவர்களுக்கு ஞானஸ்நானத்தை கொடுத்தவர்களை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது.

கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக அசையாமல் நிற்கவேண்டும் என்ற வைராக்கியம் எங்கே போனது? 

*சுய ஆதாயத்திற்காய் நாம் ஓடுவதை எப்போது நிறுத்துவது?* 

உண்மையை ஆராய மனமில்லாமல் சிலர் சொல்லும் கருத்துக்களில் தங்களது நிலையையே மாற்றிக்கொண்டு ஊரோடு ஒத்துப்போகிற மனப்பான்மை இருந்தால் - *சத்தியத்திற்கு எப்படி போராடுவது?* 

வேற்று ஜனம் உள்ளே வந்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச்சொன்னாலும் தங்கள் கதவை அடைத்துக்கொண்டு அவர்களை சமாதானப்படுத்த அப்படியே சொல்லிவிடுவரோ என்ற எண்ணமும் உள்ளது? 1சாமு. 15:24(c)

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை கடைபிடிக்கிறோம் என்று வாயால் சொல்வது போதாது... செயலிலும் உண்மை இருக்கவேண்டும். 

*நமது செயலுக்கான அங்கீகாரத்தை சுவாசமுள்ள மனிதர்களிடத்திலிருந்து அல்ல தேவனிடத்திலிருந்து வரட்டும்*. அப். 5:29; 4:19. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
 
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group):*

*எங்களது வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

சனி, 28 டிசம்பர், 2024

#1209 - ஒருவனுடைய பாவத்தை மற்றவன் சுமப்பதில்லை என்றும் அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும் என்று வசனங்கள் சொல்லியிருக்க இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காய் எப்படி மரிக்கமுடியும்?

#1209 - *ஒருவனுடைய பாவத்தை மற்றவன் சுமப்பதில்லை என்றும் அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும் என்று வசனங்கள் சொல்லியிருக்க இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காய் எப்படி மரிக்கமுடியும்?* எசே. 18:20, உபா. 14:16.

*பதில்* : அவரவர் பாவத்திற்கு அவரவர்களே பொறுப்பாளிகள் என்று வேதம் கூறுகிறது (உபாகமம் 24:16, எசேக்கியேல் 18:20). இருப்பினும், சிலுவையில் நிறைவேறியதான இயேசு கிறிஸ்துவின் மரணம் *நமது பாவங்களுக்குப் பதிலானப் பலியாக* இருந்தது என்றும் வேதம் கற்பிக்கிறது.

பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது. மனிதகுலத்திற்கும் தேவனுக்கும் இடையே பாவமானது ஒரு தடையை அல்லது பிரிவை உருவாக்குகிறது, தேவனை நாம் நமது சுய முயற்சியால் அணுக முடியாது (ஏசாயா 59:2, ரோமர் 3:23).

ஒரு பாவமும் இல்லாத, பரிசுத்தமானவரும் தேவக்குமாரனுமான இயேசு கிறிஸ்துவானவர், நம்முடைய பாவத்தின் பாரத்தைச் சுமந்து சிலுவையில் நம் இடத்தைப் பிடித்தார் (ரோமர் 5:8, 2கொரிந்தியர் 5:21).

நம்முடைய பாவத்திற்கான தண்டனையை அவர் செலுத்தினார். இயேசுவின் மரணம் நாம் தேவனுடன் ஒப்புரவாகவேண்டியதை நிறைவேற்றியது, நம்முடைய பாவத்திற்கான தண்டனையை செலுத்தியது (ரோமர் 3:25, 1 யோவான் 2:2).

விசுவாசத்தின் மூலம் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம். இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்படிந்து அவரது வார்த்தையின்படி இரட்சிக்கப்படும்பொழுது, தேவனிடத்தில் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் (ரோமர் 3:24-25, 5:1).

கிறிஸ்துவின் சிலுவை பலியானது நமது பொறுப்பை நிராகரித்துவிடவில்லை. இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்கு பதில் அவர் தண்டனையே ஏற்றுக்கொண்டபோதும், அதையும் மீறி பாவத்தில் ஈடுபடும்பொழுது நம்முடைய பாவத்திற்கு நாம் தண்டிக்கப்படுவது நிச்சயமே.

அவருடைய சிலுவை மரணமானது நமது பாவங்களை மன்னித்து தேவனுடன் ஒப்புரவாக்க வழி ஏற்படுத்தியது. உதாசீனப்படுத்தும் பொழுது அவரவர்கள் அதற்கான தண்டனையை நிச்சயம் பெற்றுக்கொள்வர். 2தெச. 1:7-10, எபி. 2:2-4.

மேலும், எசேக்கியேல் 18:20ம் வசனங்களின் கருத்தை புரிந்துக்கொள்வது அவசியம். ஒவ்வொருவரும் அவரவர் பாவங்களுக்கு பொறுப்பாளிகள். உங்கள் பெற்றோர் அல்லது மூதாதையர்கள் செய்த பாவங்களுக்கு நீங்கள் நியாயத்தீர்ப்பில் தண்டிக்கப்படுவதல்ல.

நாங்கள் சுத்தவான்கள், நேர்மையானவர்களாயிருந்தும், தங்களது முன்னோர் அல்லது பிதாக்கள் பாவம் செய்ததாலேயே தாங்கள் சிறைபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதாகக்  யூதர்கள் கூறினர்.

ஆனால், அவர்களது முன்னோர் செய்த அதே பாவங்களை இவர்களும் தொடர்ந்து செய்வதால் சிறைபிடிக்கப்பட்டதை தேவன் சுட்டிக்காட்டுகிறார்.

ஆதாமின் பாவத்திற்கோ வேறு யாருடைய பாவத்திற்கோ இயேசு கிறிஸ்து பொறுப்பாகவில்லை. (எபிரெயர் 4:15). அப்படியானால், உலகின் பாவங்களைச் சுமக்க இயேசு கிறிஸ்து தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று அர்த்தமல்ல.

பலியாக செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவைக் குறித்த வசனத்தைக் காணவும்:

“அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.  அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போக விடக்கடவன்”. லேவி. 16:21-22

இஸ்ரவேலின் பாவங்களுக்கு ஆடு பொறுப்பேற்கவில்லை, அல்லது ஆடு பாவம் செய்யவில்லை, ஏனென்றால் அது இஸ்ரேலின் பாவங்களைச் சுமக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த செயல் *பாவத்தை நீக்குவதைக் குறிக்கிறது*. அவ்வாறே இயேசு கிறிஸ்துவும் நம்முடைய பாவங்களைச் சுமந்தார்.

ஒரு பாவமும் அறியாத இயேசு கிறிஸ்து, தேவனுடைய கோபத்திற்கு நாம் ஆளாகாமல் இருக்க, நம்முடைய பாவங்களுக்குத் தகுந்த தண்டனையை அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். அதாவது பரிசுத்தமாய் இருந்தபொழுதும் நமக்காய் நம்மை மீட்கும்பொறுட்டு அவர் ஒரு பாவியாக நடத்தப்பட்டார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
 
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group):*
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*எங்களது வலைதளம்
* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

வெள்ளி, 29 நவம்பர், 2024

கிறிஸ்துவின் சபை என்ற சபை?

 கிறிஸ்துவின் சபை என்ற சபை?

- by Eddy Joel Silsbee

 
2024ம் வருடம் விசித்திரத்திற்கு பஞ்சமின்றி துவங்கியிருக்கிறது. 
 
(1)
வருடத்தின் ஆரம்பத்தில் மற்றவர்களின் கால்களை கழுவி ஒருவர் தனது தாழ்மையை வெளிப்படுத்தினார். நல்ல வேளையாக வாரத்தின் முதல் நாளில் அதை அவர் செய்யவில்லை!! கிறிஸ்து மரிக்க போகிறார் என்று தெரிந்ததும், அடுத்து யார் பரலோகத்தில் பெரியவனாக இருக்கவேண்டும் என்ற விவாதமே அந்த சூழல். தன் அம்மாவையும் சிபாரிசுக்கு அழைத்தனர். மத். 20:18-28.
இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின் கிறிஸ்தவத்தில்; தங்களது தாழ்மையை வெளிப்படுத்த அப்போஸ்தலர்கள் ஒருவருக்கொருவர் கால்களைக் கழுவவேயில்லை. நாமும் செய்ய வேண்டும் என்று கிறிஸ்து விரும்பியிருந்தால் அப்போஸ்தலர்கள் வலியுறுத்தியிருப்பார்கள். கிறிஸ்துவே கால்களை கழுவியப் பின்னரும் யூதாஸ் மனம் மாறவில்லை !! கிறிஸ்தவம் என்பது செயலில் அல்ல இருதயத்திலும் இருக்கவேண்டும். அவசியமின்றி காட்சிப்படுத்தப்பட்ட இந்த உதாரணம் வளர்ந்து வருபவரினிடையே தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. 
 
(2)
இன்னொரு சிறுபான்மைக் கூட்டம், சொற்ப லாபத்திற்காக அரசுவிடம் சென்று உலக சட்டத்தின் பார்வையில் கிறிஸ்துவின் சபையை சிறுபான்மையாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. 
 
ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவின் சரீரத்தில் *ஒரு சிறு பங்கு /உறுப்பு மாத்திரமே*.
தங்களது ட்ரஸ்ட்டை சிறுபான்மை கூட்டமாக அங்கீகரியுங்கள் என்று முயற்சிக்காமல்;
உன்னதமான *கிறிஸ்துவின் சபையை* சிறுபான்மையாக அறிவியுங்கள் என்று அரசாங்கத்திடம் மனு கொடுக்க யார் அதிகாரம் கொடுத்தது?
கிறிஸ்துவே கிறிஸ்துவின் சபைக்கு தலை.
அதைக்குறித்து தீர்மானம் எடுக்க அவருக்கும் அப்போஸ்தலருக்கும் தான் அந்த அதிகாரம் உள்ளது. 
 
ஊழியர்களாகிய நீங்களும் நானும் சபைக்கு தேவையான ஊழியத்தை செய்யும் வேலைக்காரர்கள் மாத்திரமே !! 
 
அதை மறந்து இப்படிப்பட்ட தவறான செய்கையில் ஈடுபடுவது அபத்தம்.
இந்த கூட்டு முயற்சியை
- வளரும் ஊழியர்களுக்கு பயிற்சி கொடுப்பதிலும்,
- சட்டத்தின் பார்வையில் எப்படி சபையை நடத்தவேண்டும் என்றும்,
- எப்படி நடத்தக்கூடாது என்றும்,
- வேதாகம ரீதியில் உட்கட்டமைப்பு எப்படி பலப்படுத்தவேண்டும் என்றும்,
- தீர்க்கமான சட்டக்குழுவை அமைத்து, மதக்கலவரங்களில் அகப்படும் பிராந்திய சபைகளுக்கு தேவையான சட்ட போராட்டங்களில் சட்டத்துடன் போராடுவதற்கும்,
- பிராந்திய சபைகளுக்கு சட்ட பாதுகாப்பு / ஆலோசனை கொடுப்பதிலும்;
- ஊழியர்களை தேசத்தின் சட்டத்திட்டங்களில் பயிற்றுவிப்பதற்கும்;
போன்ற அநேக காரியங்களில் கவனம் செலுத்தலாம். 
 
இந்த ஐக்கியம் பூரணமாய் பெலப்படும்பொழுது அரசாங்கமே வந்து தங்களது கோரிக்கையை வைக்கும் சூழல் உருவாகும்.
 
அதைவிட்டு, இப்படி அரசாங்கத்திடம் *கிறிஸ்துவின் சபை* என்ற மேலான தேவனுடைய இராஜ்யத்தையே அடகு வைக்க முற்படக்கூடாது. அப்படிப்பட்ட எந்த அதிகாரமும் எவருக்கும் கிடையாது. 
 
சபைகளில் மூப்பர்கள் என்ற பதமே இக்காலத்தில் காண்பது அரிதாகிவிட்டது.
வயதாகிவிட்டதென்றும், மூப்பர்கள் என்ற பதவி அவசியம் என்றும் சிலரை மேலே உட்காரவைத்துவிட்டு ஊழியர்களே அவர்களுக்கு தலைவராக செயல்படுவதால் இந்த அவலம்.
 
அதிகாரிகளாகவும் எஜமானர்களாகவும் ஊழியர்கள் ஓங்கி நிற்பது வேதாகம முறைப்படி தவறு அல்லவா? 
 
ஜெபிப்பதிலும் போதிப்பதிலும் தங்களது கவனத்தை விட்டு நிர்வாகத்தில் ஊழியர்கள் இறங்கக்கூடாது. 
 
இவர்களது இந்த தவறான முயற்சியில் *ஒருவேளை அரசாங்கம் கிறிஸ்துவின் சபையை சிறுபான்மை என்ற பட்டியலில் கொண்டுவந்தால்*:
அரசாங்கத்தின் பார்வையில் ஒவ்வொரு பிராந்திய சபையின் சுயாட்சியும் கேள்விக்குறியாகும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
அரசாங்கம் உங்களது கதவை தட்டி சர்டிபிகேட் கேட்கும்.
நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் மறுத்தாலும் கிறிஸ்துவின் சபை என்ற பெயரை பயன்படுத்துவதாயிருந்தால் அவர்கள் தங்களது வரையறையை உங்களுக்கென்று வகுப்பார்கள். 
 
பிற்காலத்தில் விக்கிரகத்தை பற்றும் வேறு அரசாங்கம் வராமல் போய்விடுமோ?
இந்த அரசாங்கம் ஏறெடுக்கும் எந்த முயற்சியும் வருங்காலத்தில் வரும் எந்த அரசாங்கத்திற்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.
 
நாம் எப்படி சபையை நிர்வாகம் செய்யவேண்டும் என்பதை அந்நியனும் புறமதத்தினரும் சட்டத்திட்டத்தை நமக்கு சொல்லிக்கொடுப்பார்கள். 
 
சொற்ப லாபத்திற்கும் கட்டிட செலவிற்கும் அவர்களிடம் கையேந்தி சிலர் லாபம் அடைந்தாலும் மற்ற அனைத்து கிறிஸ்துவின் சபை பெயர் பலகைகளும் அரசாங்க சட்டத்திற்கு உட்படவேண்டிவரும். 
 
நமக்கென்ன? என்று இந்த குழுவில் இடம்பெறாத மற்ற பிராந்திய சபையின் ஊழியரும் மூப்பரும் அமைதியாய் நில்லாமல் அனுபவத்தில் மூத்திருக்கும் ஒவ்வொரு ஊழியரும் இதை கவனத்தில் கொண்டு தங்கள் கையை உயர்த்துங்கள். 
 
இந்த கூட்டு முயற்சியை வைத்து அரசாங்கத்தில் ஆதாயம் பெறுவதை விட்டு;
விசுவாச வைராக்கியத்திற்கு பயன்படுத்துங்கள். 
 
எத்தனையோ வகையில் வருங்கால சந்ததியை கிறிஸ்துவிற்கென்று கட்டியெழுப்ப இதை முன்னெடுங்கள். 
 
ஒருவேளை இந்த காலம் கடந்து போனாலும் இன்னுமொரு எஸ்தரும் மொர்தெகாயும் இல்லாமற் போவார்களோ? 
 
இணைந்து சீர் செய்யப்படவேண்டிய கட்டாயக் காலத்தில் இருக்கிறோம்.
*குறிப்பு* : என்ன நடந்தாலும், கிறிஸ்துவின் சபை எப்போதும் தனித்துவமாய் செயல்பட்டுக்கொண்டே தான் இருக்கும். அது ஒரு போதும் கறைப்படுவதில்லை. ஆகவே அதை எவரும் *மீட்டு எடுக்கவேண்டிய அவசியமில்லை*. அது எப்போதும் சீராய், கிரமமாய், தேவனுடைய வார்த்தையின்படி இயங்கிக்கொண்டே தான் இருக்கும். 
 
எந்த புரிதலில் நாம் இருக்கிறோம் என்பதே காரியம்.
கிறிஸ்துவின் சபையில் இருக்கிறோமா அல்லது கிறிஸ்துவின் சபை என்ற சபையில் இருக்கிறோமா?
 
செயலில் இறங்கவேண்டிய நேரம் இது. மௌனமாய் இராதேயுங்கள். 
 
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:
யோவான் 6:67... கிறிஸ்துவினுள் இருந்த அந்த வைராக்கியத்திற்குள் நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் !
 
இதன் 68ம் வசனம் இன்றைய நாட்களில் நமக்குறிய கேள்வி!
 
எடி ஜோயல் சில்ஸ்பி
ஊழியர், கிறிஸ்துவின் சபை
கணியாகுளம்.
Print Friendly and PDF