திங்கள், 26 ஜூலை, 2021

கணவனே குடும்பத்திற்கு ஆதாரம் - தினசரி சிந்தனைக்கான வேத துளி

*கணவனே குடும்பத்திற்கு ஆதாரம்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 26 July

by : Eddy Joel Silsbee

 

பிதாவாகிய தேவன் தாமே நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருவாராக.

 

நேற்று குடும்பத்தில் மனைவியின் பங்கைப் பார்த்தோம்.

 

இன்று கணவனின் பங்கு.

 

ஆண் என்கிற எண்ணத்தில் மேற்போக்கான அதிகாரச் சிந்தனையோடு சில கணவர்கள் இருந்து விடுகிறார்கள்.

 

உயர்வாகவும் தாழ்வாகவும் இல்லாதபடிக்கு கணவனுக்கு *ஏற்ற துணையை* நடுப்பகுதியான விலாவிலிருந்து எலும்பை எடுத்து மனுஷியை உண்டு பண்ணினார் தேவன். ஆதி. 2:22

 

தாயும் தகப்பனும் உலகத்தில் இல்லாதிருந்த காலத்திலேயே, தேவன் சொன்ன கட்டளை “பெற்றோரை” விட்டு *மனைவியோடு ஒன்றாய்* இருக்க வேண்டும் என்று. இந்த வலியுறுத்தலை நான்கு முறை வேதாகமத்தில் பார்க்க முடியும். மத். 19:4-6, எபே. 5:31, மாற்கு 10:7, ஆதி. 2:24

 

ஆதனால், திருமணமானதும் பெற்றோரை கழற்றி விட்டு விட சொல்லவில்லை.

 

இருவரும் (கணவனும் மனைவியும்) ஒரே சரீரம் என்பதால், எப்படிப்பட்ட பெற்றோராக இருந்தாலும் மனைவிக்கு அல்லது கணவனுக்கு பின்னரே பெற்றோருக்கு உரிமை என்ற அர்த்தம் அது. மல். 2:14-16; மத். 19:3-9; மாற்கு 10:6-12; ரோ. 7:2; 1கொரி. 6:16-17, 7:2-4, 10-11; எபே. 5:28-31; 1தீமோ. 5:14; 1பேதுரு 3:1-7

 

மனைவியானவள் ஒரு அடிமையோ, வேலைக்காரியோ, பொம்மையோ, வீட்டு வேலை செய்யும் ஓர் எந்திரமோ கிடையாது.

 

ஆண்களை போல அல்லது ஆண்களை காட்டிலும் மன வலிமையும் ஆற்றலும் உள்ளவர்கள். நீதி. 31:17

 

மனைவியின் மரியாதையை பெற கணவன் அதை முதலில் கொடுக்க வேண்டும். *அன்பை கொடுத்து மரியாதையை சம்பாதிக்க வேண்டும்*. எபே. 5:33

 

வெறுப்போடும், உதாசீனத்தோடும் மனைவியை “வல் வள்” என்று எப்போதும் எறிந்து விழுந்தால் சண்டையே நிலைக்கும்.

 

திருமணத்திற்கு பின்னர் ஒருபோதும் தன் மனைவியின் அழகையும் நிறத்தையும் சரீர பாவனையையும் மற்ற பெண்களோடு ஒப்பிட்டு பேசுவது வேசித்தனம். 1கொரி. 7:2, 6:18

 

மனைவிக்கு தலை கணவன். ஆகவே, அவளுக்குத் தேவையான *அனைத்து ஆலோசனைகளையும்* கணவன் கொடுக்கத் தவறக்கூடாது. எபே. 5:23

 

பாவிகளாகவும் (ரோ. 5:8) சத்துருக்களாகவும் (ரோ. 5:10) பெலனற்றவர்களாகவும் (ரோ. 5:6) விரோதிகளாகவும் அக்கிரமக்காரராகவும் (ரோ. 5:6) இருந்தபோதும், தன் மனைவியை நேசித்து தன்னையே ஒப்புக்கொடுத்தவர் கணவனாகிய இயேசு கிறிஸ்து. எபே. 5:26-27, வெளி. 21:2

 

ஆகவே, மனைவியானவள் அலாரமாக இருந்தாலும், அலங்காரமாக இருந்தாலும், எறிந்து விழுந்தாலும், விரோதித்தாலும், உதாசீனப்படுத்தினாலும், மோசமானவளாயிருந்தாலும் நேசிக்க வேண்டும். அந்த அன்பினாலேயே நம் அனைவரையும் கிறிஸ்து இரட்சித்தார் !!

 

வீட்டில் கணவனாக இருக்க வேண்டும். வெளியே இருப்பது போல வீட்டிற்குள்ளேயும் பாஸ்டராகவோ, முதலாளியாகவோ,  வாத்தியாராகவோ, மேனேஜராகவோ எஜமானனாகவோ, கம்பெனியில் வேலை செய்வது போல தொழிலாளியாகவோ வீட்டில் இருத்தல் கூடாது. ஒரு மனைவிக்கு கணவனே அவசியம். வேலைக்காரன் அல்ல !!

 

மனைவியால் வெறுக்கப்பட்டாலும் ஒதுக்கப்பட்டாலும், மனைவிக்கு செலுத்த வேண்டிய அன்பை கணவன் நிச்சயம் செலுத்த வேண்டும். எபே. 5:28. உரிய அன்பை செலுத்தும் போது, உரிய கனம் தானாய் வரும்.

 

கணவனுக்காக *படைக்கப்பட்டவள்* மனைவி. (1கொரி. 11:9) அவளது பெலன் அனைத்தும் கணவரே.

 

அவர்களும் பரலோகத்தில் வருகிறவர்களாகையால் சரி சமமான மதிப்பை கணவன் கொடுக்க வேண்டும். 1பேதுரு 3:7

 

கணவன் மனைவி இருவரும் சம்மதித்தாலன்றி ஒருவரை விட்டு ஒருவர் தாம்பத்தியத்தில் பிரிந்திருக்கக்கூடாது. (1கொரி. 7:5). இதில் மீறுபவர்களின் எப்படிப்பட்ட ஆன்மீக ஜெப வாழ்க்கையும் வெளி ஜனங்களுக்கான வேஷமாகவே இருக்கும். எச்சரிக்கை !!

 

எந்த இடத்திலும் மனைவிக்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டும். 1பேதுரு 3:7, 1கொரி. 12:22

 

கூடவே இருக்கும் மனைவியிடமும் அல்லது கணவனிடமும் அன்பு செலுத்தாமல் வஞ்சம் வைத்து; வருபவரிடமும் காண்பவரிடமும் உருகி உருகி ”சிஸ்டர் பிரதர்” என்று பேசுவதும், அவர்களுக்காக ஜெபிப்பதும் முழுமையான வேஷம் !!

 

வறட்டுக் கவுரவத்தை பாராமல் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் வேறுபாடுகளை களைந்து, புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, தேவன் கொடுத்திருக்கும், அனுமதித்திருக்கும் இந்த மிக சொற்ப காலத்தில் சந்தோஷமாக வாழ வேண்டும்.

 

இருவர் மனமும் பிரிந்திருக்க ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது.

 

சூரியன் அஸ்தமிக்கும் முன்பே தணியாத எரிச்சலும் பிரிவும் உள்ளவர்களின் எந்த ஜெபமும் அவர்கள் வீட்டுக்குறையை தாண்டாது !! எபே. 4:26. வாழ்க்கையை வீணடித்து, ஊரை ஏமாற்றாமல் கணவன் மனைவி உறவை முதலாவது சரிசெய்யவேண்டும்.

 

பிரிவுகளையும் கசப்பையும் களைந்து, சகல அன்புடன் அனைத்து குடும்பமும் கட்டபடட்டும்...

 

தேவன் தாமே பொறுமையையும் சமாதானத்தையும் அருளுவாராக.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*                                         

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/yZ7yG6cFvJk

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக