வெள்ளி, 10 ஜனவரி, 2020

#699 - மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்?

#699 - *மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்?* அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி, அவன் நிலைநிறுத்தப்படுவான், தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.  ரோமர் 14:4 - Please explain this to me*

*பதில்*
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் என்ற மத் 7:1ம் வசனத்தை மிக அதிகமாக மாறி புரிந்து கொள்ளப்பட்ட வசனம் என்றே சொல்லவேண்டும்.

பல முறை, *வேதம் சொல்வதின்படி கீழ்படியாத நடக்காத போதிக்காதவர்களை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால், உடனடியாக இந்த வசனத்தை குறிப்பிட்டு நியாயந்தீர்க்க வேண்டாம் என்று தப்பித்துக்கொள்வார்கள்*.

ஒரு விமர்சனக் கண்ணால் நம் சகோதரனைப் பார்ப்பதற்கு முன்பு நாம் நம்மைப் பார்க்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி கிறிஸ்து சொல்கிறார்.

உதாரணமாக, என் கையில் விஸ்கி பாட்டில் வைத்திருக்கும்போது, மற்றொருவர் குடிக்கிறார் என்று அவரை விமர்சிக்கவோ அல்லது தீர்ப்பளிக்கவோ எனக்கு என்ன உரிமை இருக்கிறது?

நாம் மற்றவர்களைக் கண்டிக்கும் போது நம் செயல்பாடுகளை முதலாவது கவனிக்க வேண்டும்.

ரோ 2:1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய் என்று சொல்கிறது.

மற்றவர்களை விமர்சிக்கவோ தீர்ப்பளிக்கவோ முடியாது என்று நம் தேவன் சொல்லவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால் நாம் அதை சரியான வழியில் செய்ய வேண்டும். சில சமயங்களில் நாம் தீர்ப்பளிக்கக் கூடாது என்று அறிவிப்பவர்கள் தங்கள் சொந்த நடைமுறைகளை ஆராய விரும்புவதில்லை.

சிறிது வெளிச்சம் போடக்கூடிய வேறு சில வசனங்களையும் பார்ப்போம்.

யோவான் 7: 24-ல் தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள் என்றார்.

இங்கே அவர் நமக்குத் தெளிவாகக் கூறுவது, நமக்கு நியாயந்தீர்க்க உரிமை உண்டு, ஆனால் அது சரியான வகையான தீர்ப்பாக இருக்க வேண்டும்.

பவுல் கூறுவதை கவனியுங்கள் :
2கொரி 5:1-5 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.  

இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.

நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,

நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,

அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.

இந்த வசனங்களில் இரண்டு குறிப்பிடத்தக்க விஷயங்கள் உள்ளன, இது விபச்சார விஷயத்தை கையாள்கிறது, விசுவாசிகள் அல்லாதவர்கள் கூட இந்த காரியங்களை அனுமதிக்காது.

கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு தாழ்மை மனப்பான்மை இல்லாமல் இருப்பதாக பவுல் விமர்சித்தார்.

வெளிப்படையாக இவ்வாறு அவர் அவர்களை "நியாயந்தீர்த்தார்" என்பதை மறுக்க யாரால் மறுக்க முடியும்?

பாவம் செய்த மனிதனை "ஏற்கெனவே நியாயந்தீர்த்ததாக" பவுல் சொன்னார். பவுல் கிறிஸ்துவின் கட்டளையை மீறினாரா?

அவர் மனிதனின் இதயத்தையோ நோக்கங்களையோ தீர்மானிக்கவில்லை, ஆனால் மனிதனின் பாவமான நடத்தை தவறு என்று தெளிவாக தீர்ப்பளித்தார்.  

அப்படியென்றால் "தவறான போதனை செய்பவர்களை நாம் நியாயந்தீர்க்க / குற்றப்படுத்த முடியுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது. பதில் "ஆம்".

கிறிஸ்து தனது நாட்களில் தவறான நபர்களுக்கு எதிராக அடிக்கடி பேசினார்.  

பரிசேயர்களையும், வேதபாரகரையும், சதுசேயர்களையும் யோவான் மத்தேயு 3:7ல் பலமான வார்த்தைகளைக் கவனியுங்கள் விரியன் பாம்புக் குட்டிகளே என்றார் !!

அவர்ளக் சொந்தக் கோட்பாடுகளும் நியாயபிரமாணத்தோடு கூடுதலாக கடைபிடித்தார்கள். ஆகவே கண்டித்தார்.

மத்தேயு 15:9-ல் கிறிஸ்து அவர்கள் செய்த பிழையை சுட்டிக்காட்டி வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றார்.

பவுல் கலாத்திய சபைக்கு எழுதியபோது, வலுவான தீர்ப்புகளை அவர் கொண்டிருந்தார். "உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என்கிறார் ”(கலாத்தியர் 1: 6-8).

*நியாயந்தீர்ப்பதற்கும் குற்றத்தை சுட்டிக்காட்டுவதற்குமான வித்தியாசத்தை உணர்ந்தால் இலகுவாக புரியும்*.

தீத்து 1:14 விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.

தீத்து 2:15 இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக. 

லேவி 19:17 உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.

சங் 141:5 நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.

*ஒருவரின் செயல்பாடுகளை கண்டிக்க வேண்டும். ஆனால் அவர் நரகத்திற்கு போவார் என்றோ நாசமாக போவாய் என்றோ சொல்வதற்கு நமக்கு உரிமை இல்லை*.

காரணம், எஜமானன் (தேவன்) அவனை மாற்ற வல்லவராகையால் பின்னொரு நாளில் அவர் மனந்திரும்பி நல்வழிக்கு வந்தால் இரட்சிப்படைந்து பரலோகம் சென்று விடுவார். *“நாசமாக போவாய்” என்று சொன்னவர் பொய் சொன்னதாகிவிடும்*.

சத்தியத்தில் நடப்பவர் நிச்சயமாக சத்தியத்தை மாற்றி போதிப்பவரையோ தவறாக நடப்பவரையோ சுட்டிக்காட்டினாலன்றி எப்படி ஒருவர் தன் தவறை உணர்ந்து திருந்துவார்?

இது சரியாக கற்றுக்கொள்ளாமல் வேதத்தை தவறாக / அரைகுறையாய் புரிந்து போதிப்பவர்களுக்கும் நிச்சயமாக பொருந்தும் யாக் 3:1

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் : 

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக