திங்கள், 26 டிசம்பர், 2022

#1163 - நன்மை தீமை அறியதக்க மரத்தை தேவன் ஏன் உருவாக்கினார்?

*#1163 - நன்மை தீமை அறியதக்க மரத்தை தேவன் ஏன் உருவாக்கினார்?* உருவாக்கியதோடு நில்லாமல் அதன் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று ஆதாமிடம் ஏன் சொல்லவேண்டும்? மாறாக, தேவன் அந்த மரத்தை உருவாக்காமல் இருந்திருக்கலாமே? அதனால் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ய வாய்ப்பு இல்லாமலேயே போயிருக்குமே?

*பதில்* : நேரடியான பதிலை இந்த கேள்விக்கு நாம் காணமுடியாது. ஆனால், அதற்கான காரணத்தை சந்தேகத்திற்கிடமின்றி நன்கு அறியமுடிகிறது.

மனிதன் தேவசாயலிலும் தேவனுடைய ரூபத்திலும் உருவாக்கப்பட்டான். ஆதி. 1:26

தேவனுடன் முழு இருதயத்தோடும் அன்புடனும் இருக்கவேண்டுமா அல்லது சுய சார்பாக இருக்க வேண்டுமா என்ற தீர்மானத்தை மனிதனே எடுக்கும் அளவிற்கு அவனுக்கு சர்வ சுதந்திரமும் இருந்தது.

ஒரு மெஷினை போல அல்லது பொம்மையை போல மனிதனை உருவாக்காமல், சுய விருப்பமாக இருக்கும்படி சிருஷ்டிக்கப்பட்டான்.

மனிதன் தன்னை முழுமையாய் உணர்ந்து எச்சூழ்நிலையிலும் தன்னை பின்பற்றவேண்டும் என்பதே தேவனுடைய நோக்கமாயிருக்கிறது. மத். 22:37

தான் பெற்றெடுத்த பிள்ளையை திடீரென்று ஒரு பெண் இது என்னுடைய மகன் என்றால் பெற்றெடுத்த தாய் சந்தேகப்படுவாளோ? மாறாக, தனது மகன் என்பதை ஊர்ஜிதமாய் அறிந்ததால் எந்த சூழ்நிலையிலும் தளரமாட்டாள்.

அவ்வண்ணமாக, இவர் மாத்திரம் தான் கடவுள், இவரே சர்வ வல்லவர், இவர் தான் எல்லாமும் எல்லாம் என்று மனிதன் உணர்ந்துவிட்டால் – எந்த பிரச்சனை வந்தாலும் நெருக்கடி வந்தாலும் மரண உபாதையே வந்தாலும் மனம் தளராமல் தேவன் ஒருவரே போதும் என்று பற்றிக்கொள்வான்.

இவர் தான் ஆண்டவர், இவர் தான் கர்த்தர், இவர் தான் தேவன் என்பதை நேரடியாய் அறிந்து உணர்ந்தவர்கள் தங்களது உயிர் எடுக்கப்படும் என்று அச்சுறுத்தப்பட்டபோதும்; உயிர் தானே எடுத்துக்கொள் என்று தைரியமாய் அவர்களுக்கு சவால் விட்டனர் சீஷர்கள். அப். 5:29, 40-42.

ஆனால், தேவனைப் பின்பற்றுவதற்கு அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதற்கு மனிதனுக்கு ஒரு சோதனை இருந்தாலன்றி அவனது தேர்வை தீர்மானிக்க முடியாதே.

எனவே, நன்மை தீமை அறியும் மரத்தை தோட்டத்தில் வைத்திருக்க வேண்டும். அதன் பழங்களை உண்பது மரணத்தை விளைவிக்கும் என்று மனிதனுக்கு ஒரு சட்டத்தையும் வழங்கினார். இந்த கட்டளை கொடுக்கப்பட்டபோது ஏவாள் உருவாக்கியிருக்கவில்லையென்பதை கவனிக்கவும். ஆதி. 2:16-18

மனிதன் தனது கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கடவுள் எப்போதும் விரும்பினார். எனவே அத்தகைய கீழ்ப்படிதலை எளிதாக்க பல்வேறு வழிகளைப் பயன்படுத்தினார்.

முதலில், தேவன் நன்மை தீமை அறியும் மரத்தை தோட்டத்தின் நடுவில் வைத்தார் (ஆதி. 3:3). அந்த மரம் தோட்டத்தின் நடுவே அமைந்திருந்ததால், அதன் பழத்தை மனிதன் மற்றொன்று என்று தவறாக நினைத்து உண்ண முடியாது.

இரண்டாவதாக, தேவன் ஜீவ விருட்சத்தையும் தோட்டத்தின் நடுவில் வைத்தார் (ஆதி. 2:9). இந்த மரமும் தோட்டத்தின் நடுவே இருப்பதை கவனிக்கவும். இந்த மரத்தை மற்ற மரத்திற்கு மிக அருகில் கண்டறிவதன் மூலம், கீழ்ப்படியாமைக்கு மேல் கீழ்ப்படிதலையும், மரணத்திற்கு மேல் வாழ்க்கையையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மனிதனுக்கு உள்ளதை தேவன் தெளிவுபடுத்துகிறார்.

மூன்றாவதாக, தடைசெய்யப்பட்ட இந்த மரத்தின் கனியை மனிதன் சாப்பிட வேண்டிய அவசியமில்லை என்ற நோக்கத்துடன் கடவுள் இன்னும் பல மரங்களை உருவாக்கினார் (ஆதி. 2:9). கடவுள் தோட்டத்தில் பல்வேறு வகையான மரங்களை வளரச் செய்ததோடு மட்டுமல்லாமல், “பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார் என்று வசனம் நமக்குத் தெரிவிக்கிறது.

கடவுள் மனிதனுக்கு பல மரங்கள் இருப்பதை உறுதிசெய்தார்.

நிச்சயமாக, தனது தெய்வீக சித்தத்திற்கு கீழ்ப்படிய மனிதனுக்கு தேவையான வழிகளை தேவன் வழங்கினார்.

இன்னும் ஒரு காரியத்தை நாம் கவனிக்கிறோம். ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடிவு செய்தாலும், கடவுளின் திட்டம் தோல்வியடைந்தது என்று அர்த்தமல்ல. மனிதன் பாவத்திலும் கீழ்ப்படியாமையிலும் விழுந்தால், கடவுளைக் குறை சொல்லமுடியாது. யாக். 1:13.

நன்மையோ தீமையையோ தேர்ந்தெடுப்பது மனிதனின் தெரிவு. அதன் பலனின் தீர்வை இறுதியில் பெற்றுக்கொள்கிறான். மத். 25:46

உபா. 30:19-20 நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

இதனிமித்தம், மனிதன் ஒரு பொம்மையாக மற்றவர்கள் சொல்வதினால் கடைபிடிப்பதைக் காட்டிலும் முழு மனதுடனும், முழு இருதயத்துடனும் தன்னை பின்பற்றும்படிக்கு ஏதேன் தோட்டத்தில் நன்மை தீமையறியத்தக்க மரம் இருந்ததினால் மனிதனின் சுய சிந்தனையினாலும் சுய தேர்வினாலும் தேர்ந்தெடுக்கும் முடிவை தேவன் அனுமதித்தார் என்று அறிகிறோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக