புதன், 4 டிசம்பர், 2019

#646 *கேள்வி* ஆசரிப்பு கூடாரத்தில் ஆரோன் சந்ததி மட்டும் தான் போனாங்களா இல்லை வேறு யாரும் போனாங்களா???

#646 *கேள்வி - ஆசரிப்பு கூடாரத்தில் ஆரோன் சந்ததி மட்டும் தான் போனாங்களா இல்லை வேறு யாரும் போனாங்களா?*
 
*பதில்*
ஆசாரியர்கள் மட்டுமே கூடாரத்தினுள் வர அனுமதிக்கப்பட்டனர்.  நுழைவதற்கு முன்பு தங்களைத் தாங்களே கழுவிக் கொள்ளும்படி அவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கப்பட்டது  -  எண். 3:10, யாத். 28:1, யாத். 30:19-21, எண். 18:1-5, எபி. 9:6

ஆசாரிய ஆடைகளை அணிய வேண்டும் (யாத். 28:35).

பாவநிவிர்த்தி நாளில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியும் - லேவி. 16: 2, எபி. 9:7

லேவியர்கள் ஆரோன் குடும்பத்திற்கு உதவியாக இருந்து ஆசரிப்பு கூடாதரத்தின் வேலைகளை செய்ய வேண்டும் – எண். 8:19

*லேவியருக்கும் ஆசாரியருக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி எழும்*
ஆரம்பத்தில், இஸ்ரவேல் முழுவதையும் ஆசாரியர் தேசமாக மாற்ற தேவன் சித்தமாக இருந்தார்.

"இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைகொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்" - யாத். 19:5-6.

இஸ்ரவேலரில் முதல் பிறந்தவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய கொடுக்கப்பட வேண்டும்.

"இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.

மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது,

கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.

கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக - யாத். 13: 2,11-13.

இந்த எல்லா ஊழியர்களிடமிருந்தும், தேவன் ஆரோனையும் அவருடைய சந்ததியினரையும் தேசத்துக்கான ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுத்தார். "உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக" - யாத். 28:1.

"ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டைபண்ணுவாயாக" - யாத். 29:9

ஆனால், மோசே சினாய் மலையில் இருந்தபோது இஸ்ரவேலர் தேவனுக்கு விரோதமாக வழிபடும்படி ஒரு பொற்கன்றை உருவாக்கினார்கள்.

லேவி கோத்திரம் மட்டுமே மோசேயுடன் நின்றது - யாத். 32: 25-26.

அவர்களின் அர்ப்பணிப்பை தேவன் ஆசீர்வதித்தார் - யாத். 32:29.

அவர்களின் அர்ப்பணிப்புக்கான வெகுமதியாக, தேவன் முதல் பிறந்தவர்களை லேவி கோத்திரத்துடன் மாற்றினார்.

"இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.

முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன் மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்"- எண். 3:12-13.

லேவியர்கள் தேவனை சேவிக்கும் கடமையை ஏற்றுக்கொண்டனர்.

"அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்"- உபா. 10: 8.

அந்த சேவையில் ஆசாரியர்களுக்கு சேவை செய்வதும் அடங்கும்.
"லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்" - எண். 8:19.

கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஆரோனும் லேவி கோத்திரத்தில்  வந்தவர்.

எல்லா ஆசாரியர்களும் ஆரோனிலிருந்து வந்தவர்கள் என்பதால், எல்லா ஆசாரியர்களும் லேவியர்கள்.  லேவியர்கள் அனைவரும் ஆசாரியர்கள் அல்ல என்பதை மறந்து விடகூடாது.

ஆகையால் நாம் எப்போதும் ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒன்றாகக் குறிப்பிடப்படுவதை காணமுடியும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக